விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததையொட்டி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தனியே களமிறங்க திட்டமிட்டுள்ளன.
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாநில அந்தஸ்து பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவிகித வாக்குகளை பெற்று மாநில அந்தஸ்து பெற்றது. முன்னதாக மாநில அந்தஸ்து இல்லாததால் நாம் தமிழர் கட்சி கேட்ட சின்னமான கரும்பு சின்னம் கிடைக்கவில்லை.
இந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தாமதமாக விண்ணப்பித்ததால் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.
உயர், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிட்டு 8.19 சதவிகித வாக்குகளை பெற்றது.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.
இதில், திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது நாம் தமிழர் கட்சி.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர சின்னம் கேட்டு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டி20 உலகக்கோப்பை: ’கனடாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்’ – வெல்லுமா?
சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தேர்வு பின்னணி!