நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா , செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் பிறந்து வளர்ந்த சங்கீதா இலங்கை தமிழ் பின்னணி கொண்டவர். 1996 ஆம் ஆண்டு விஜய்யின் ‘பூவே உனக்காக’ படம் வெற்றி பெற்றிருந்தபோது, விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா, அவரைச் சந்திக்க லண்டனில் இருந்து சென்னை வந்தார். படப்பிடிப்புத் தளத்தில் விஜயை சந்தித்தார். தொடர்ந்த சில சந்திப்புகளுக்குப் பிறகு, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25 அன்று இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மகன் ஜேசன் சஞ்சய் – கனடாவில் திரைப்படத் துறை சார்ந்த படிப்பை முடித்துள்ளார். தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் (சிக்மா படம்). மகள் திஷ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தவெக களம் காண உள்ளது.

விவாகரத்து மனு மற்றும் குற்றச்சாட்டுகள்
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் சங்கீதா இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர். இதனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்வதாக யூகங்கள் எழுந்தன.
இந்நிலையில் சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அதில்,2021 ல் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் (extramarital affair) இருப்பது தெரிய வந்ததாகவும் அதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமூக பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது விஜய் அந்த நடிகையுடனான உறவை முறித்துக் கொள்வதாக உறுதியளித்தும், தொடர்ந்து உறவில் இருந்து வந்தார் என்றும், அதன் பிறகும் பொது நிகழ்வுகளில் அந்த நடிகையுடன் ஒன்றாகக் கலந்து கொள்வது, வெளிநாட்டு பயணங்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்வது போன்றவை தொடர்ந்தன என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
இதனால் குழந்தைகளுக்கும் அவமானம் ஏற்பட்டது. விஜயின் பொது வெளி பிம்பத்தை கருதியே நீதிமன்றத்தை நாடாமல் இருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நிதி தொடர்பான சில கட்டுப்பாடுகள் விதித்ததாகவும், தன் வெளி நடமாட்டத்தையும் விஜய் கட்டுப்படுத்தினார்.” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கணவர் விஜய் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியுள்ளார் சங்கீதா.
இதுகுறித்து விஜய் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாக வில்லை.
