தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மலேசியா அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக “Malaysiagazette” என்ற மலாய் மொழி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
- டிசம்பர் 27-ந் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா ‘ தளபதி திருவிழா’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.
- இத்திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் அரசியல் சார்பாக எந்த ஒரு அம்சமும் இடம் பெறக் கூடாது; அப்படி இடம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய காவல்துறை எச்சரித்துள்ளது.
- இத்திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும் சேராஸ் மாவட்ட போலீஸ் அதிகாரி ஐடில் போல்ஹாசன் கூறுகையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்; இந்நிகழ்வை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதி இல்லை என்றார்.
- மேலும் அரசியல் கருத்துகளை பேசக் கூடாது; அரசியலைக் குறிப்பிடும் பேனர்கள், பொருட்கள், சின்னங்களை பயன்படுத்தக் கூடாது.
- பொது அமைதியையும் அனைத்து கட்டுப்பாடுகளையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.
- மலேசியாவின் புக்கிட் ஜலீல் மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் 90,000 பேர் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்ப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்துல் மாலிக் தஷ்திகீர் கூறுகையில், ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே நடத்துகிறோம்; அரசியலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றார்.
- கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில் மலேசியாவில் நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு “Malaysiagazette” ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிக்கெட் விலை ரூ7,000
மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் திரைப்பட இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.7,076.34, ரூ.4,820.57, ரூ. 2,565.48 வசூலிக்கப்படுவதாக https://www.ticket2u.com இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
