இந்தியாவில் தனிநபர் வாழ்க்கை வரலாற்றை வணிகரீதியாக திரைப்படமாக்குவது அதிகரித்து வருகிறது மன்னர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள் என்பதை கடந்து தொழிலதிபர் ஒருவரது வாழ்க்கை வரலாற்றை அவரிடமே கேட்டு திரைப்படமாக்குவது இதுவே முதல் முறை என்கிற பெருமையை பெற்றிருக்கிறது”விஜயானந்த்” திரைப்படம்.
கன்னட மொழியில் முதன் முதலில் தயாராகியுள்ள ஒரு பயோபிக் படம் என்ற பெருமையுடன் வெளிவந்துள்ளது ‘விஜயானந்த்’.
அச்சுத்தொழில் செய்துவரும் அப்பா வழியை தொடராமல் அதற்கடுத்த கட்டத்தை நோக்கி சரக்குப் போக்குவரத்து தொழிலில் கர்நாடக மாநிலத்தில் ஒரு லாரியுடன் தனது தொழிலை தொடங்கி,
சரக்குப் போக்குவரத்து துறையில் இந்திய அளவில் தொழிலதிபராக வளர்ந்து நிற்கும் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாறு தான் விஜயானந்த் திரைப்படம்.
1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதல் பாஜக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜய் சங்கேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே வாழ்ந்திருக்கிறார்.
தொழிலில் போட்டி பொறாமை ஏற்படும் சூழலில் திகைத்து பின் அதை எதிர்கொள்ளும் விதம், தொழில்முறை எதிரிகளிடம் எகிறி அடிப்பது என நடிப்பில் நற்பெயர் பெற்றே ஆகவேண்டுமென அவர் உழைத்திருப்பது தெரிகிறது.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ பிரகலாத், நல்ல குடும்பத்தலைவிக்கு அடையாளமாக இருக்கிறார். அளவான நடிப்பில் அந்த வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
பரத்போபண்ணா உள்ளிட்ட படத்தில் இருக்கும் நடிகர்களைத் தேடித்தேடி நடிக்க வைத்ததுபோல் இருக்கிறது.
மற்ற கதாபாத்திரங்களில் மேலே சொன்னவர்களைக் காட்டிலும் தனது அனுபவ நடிப்பால் தனி முத்திரை பதிக்கிறார் விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக்.
1960 காலகட்டத்தில் தொடங்கும் கதை 1990 கள் வரை பயணிக்கும் போது அந்தந்த காலத்திற்குரிய வகையில் அரங்குகளும், உடைகளும், வாகனங்களின் மாற்றங்களை திரையில் கொண்டு வர இயக்குநரும், கலை இயக்குநரும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
கோபி சுந்தர் பின்னணி இசை, கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு, ஹேமந்த் குமார் படத்தொகுப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என அனைத்துமே படத்திற்குச் சிறப்பாக கை கொடுத்திருக்கின்றன.
புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தபின் நம்பிக்கையுடன் அதில் களமிறங்குவார்கள்.
அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் தன்னம்பிக்கையாளரின் படமாக உள்ளது விஜயானந்த் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கை பயணத்தை எல்லோரும் ரசிக்கும்படி மட்டுமல்லாது கதையின் நாயகரே ரசிக்கும்படி திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரிஷிகா சர்மா.
இராமானுஜம்