என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். vijayalakshmi case police summon
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். சில நிமிடங்களிலேயே அந்த சம்மன் கிழித்து எறியப்பட்டது.
சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் சீமான் வீட்டுக்குள் சென்றனர். அப்போது சீமான் வீட்டு காவலாளிக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் சம்மன் ஒட்ட வந்த இன்ஸ்பெக்டர் மீது தாக்குதலில் ஈடுபடவே, அவரை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
அப்போது அந்த காவலாளி தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டினார். அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பொள்ளாச்சி வழக்கில், அண்ணா பல்கலைக் கழக வழக்கில் இவ்வளவு ஆர்வம் காட்டவில்லையே. இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன. இந்த அரசு வேறு எதிலாவது இதுபோன்று நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பாருங்கள்.
எவ்வளவு கேவலமாக ஆட்சி அதிகாரத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
என் வீட்டில் மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். நான் கிருஷ்ணகிரியில் இருக்கிறேன் என்று இங்கு பாதுகாப்புக்கு காவலர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.
பிறகு எதற்கு என் வீட்டில் போய் ஒட்ட வேண்டும். சேட்டைதானே. சம்மனை ஒட்டிவிட்டு போன பிறகு என் தம்பியை விட்டு கிழித்துவிட்டார்கள்.
அதில் என்ன பிரச்சினை இருக்கிறது. நான் வருவேன் என்றால் வருவேன். ஏற்கனவே நீங்கள் வந்து விசாரித்த போது பதில் சொல்லியிருக்கிறேன்.
பயந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. நாளைக்கு என்னால் வர முடியாது என்ன செய்வீர்கள்?
நீங்கள் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை அழைத்து வந்து உட்கார வையுங்கள். என்னையும் உட்கார வைத்து விசாரியுங்கள்.
15 வருடமாக எதற்கு இந்த நாடகம். மக்கள் முன் இந்த அரசு என்ன சொல்ல நினைக்கிறது.
விசாரிக்கவே இல்லை… இதுதான் நடந்திருக்கிறது என்று நீங்களாகவே ஏன் முடிவு செய்கிறீர்கள்.
இதற்கெல்லாம் பயந்து ஓடமாட்டேன். நாளைக்கு 11 மணிக்கு வந்தாகவேண்டும் என்கிறார்கள். வரமுடியாது… அவர்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளட்டும்.
இந்த வழக்கை போட்டதே நான் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் தான் இந்தம்மா (விஜயலட்சுமி) வரும். குறிப்பாக தேர்தல் சமயத்தில்… அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஏன் வரவில்லை.
என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் இந்த அம்மாவை அழைத்து வந்துவிடுவார்கள். விசாரித்துவிட்டுதான் தீர்ப்பு எழுத வேண்டும். சான்று கேட்க வேண்டும். அதன் பிறகுதான் முடிவுக்கு வரவேண்டும்.
நான் இந்த நாடகத்தை எல்லாம் பார்க்க போகிறேன். நாளை தர்மபுரி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள போகிறேன். வளசரவாக்கம் காவல்நிலையம் அங்குதான் இருக்கும். நான் இங்குதான் இருக்க போகிறேன். என்னால் வரமுடியாது” என்று பதிலளித்தார். vijayalakshmi case police summon