அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

Published On:

| By Selvam

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல் இன்று (டிசம்பர் 29) இரவு 7 மணியளவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

கூட்ட நெரிசல் காரணமாக விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலுக்கு இன்று காலை (டிசம்பர் 29) மாற்றப்பட்டது. அங்கு நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மதியம் 2.51 மணிக்கு விஜயகாந்த் உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. விஜயகாந்த் ஊர்வலம் சென்ற ஈ.வே.ரா சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டிருந்து அவரது உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமானதால், வாகனங்கள் செல்ல ஒத்துழைப்பு தருமாறு பிரேமலதா விஜயகாந்த் ஒலிபெருக்கி மூலம் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஊர்வல வாகனத்தில் இருந்தபடி அவரது மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் வழிநெடுகிலும் கண்ணீருடன் கைகூப்பி பொது மக்களுக்கு நன்றி செலுத்தினர். மாலை 5.40 மணிக்கு ஊர்வல வாகனம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

அங்கு விஜயகாந்த் உடல் கண்ணாடி பெட்டியிலிருந்து சந்தனப்பேழைக்கு மாற்றப்பட்டது. சந்தனப்பேழையில், “புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என்ற வாசகமும் அவரின் பிறப்பு, இறப்பு தேதிகளும் இடம்பெற்றிருந்தது. பின்னர் விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்தனர். இரவு 7.02 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் 200 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டதால் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வெளியில் பொதுமக்கள் பலரும் செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டபடி விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

இறுதிச்சடங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லை மேயர் பதவி தப்புமா?: நம்பிக்கை இல்லா திர்மானத்தின் மீது வாக்கெடுப்பு!

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்: ஒலி பெருக்கியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிரேமலதா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share