தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று (டிசம்பர் 28) காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “திரைத்துறையில் மட்டுமல்ல, அரசியல், பொதுவாழ்க்கையிலும் ஈடுபட்டு, மிகப்பெரிய முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். தைரியமான அரசியல் முடிவுகளை எடுத்தவர்.
அவர் நினைத்திருந்தால் எத்தனையோ பதவிகளுக்கு சென்றிருக்கலாம். ஆனால் கொள்கை முக்கியம் என்று கொள்கையில் உறுதியாக இருந்தவர். எங்களை போன்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்.
அவரை இழந்துவாடும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், அவருடைய லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வெளி மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் ரசிகர்கள்… மக்கள் வெள்ளத்தால் திணறும் கோயம்பேடு!
