Thalapathy Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் செப்டம்பர் 5 அன்று வெளியான ‘தி கோட்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படம் வெளியான முதல் 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2வது வாரத்திலும் இந்த படம் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், ‘தி கோட்’ உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை கடக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியலில் பங்கேற்க உள்ளதாக அறிவித்த தளபதி விஜய், கடைசியாக ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளதாக அறிவித்தார்.
அந்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த ‘தளபதி 69’ படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
“ஜனநாயகத்தின் ஒளிச்சுடர் விரைவில் வருகிறார்” என இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 2025-ல் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி ஊதியமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் அதிகம் ஊதியம் பெரும் நடிகர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி நடிகர் விஜய் முதலிடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான், பதான் என அடுத்தடுத்து ரூ.1,000 கோடி வசூல் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷாருக் கான், தான் கடைசியாக நடித்த ‘டன்கி’ திரைப்படத்திற்கு ரூ.250 கோடி ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சுமார் ரூ.400 கோடி செலவில் உருவான ‘தி கோட்’ படத்திற்காக, தளபதி விஜய் ரூ.200 கோடி ஊதியம் பெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
அண்ணா பிறந்தநாள் : தலைவர்கள் புகழஞ்சலி!
Asian Champions Trophy 2024: பாகிஸ்தானை வீழ்த்தி ‘இந்தியா’ கிளீன்-ஸ்வீப்!