அம்பேத்கர் பிறந்தநாளில், எந்தவித ஆரவாரமும் இன்றி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு புகழாரம் சூட்டி அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். vijay tribute to roadside ambedkar statue
டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களைவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினர்.

அதே போன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கும் மரியாதை செய்தனர். தலைவர்கள் வருகையையொட்டி சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களுள் ஒருவராக உள்ள அம்பேத்கருக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் எங்கு, எப்போது மரியாதை செலுத்துவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் எந்த வித ஆரவாரமும் இன்றி சென்னை பாலவாக்கம் பகுதிக்கு காரில் வந்த விஜய், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்” என விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விஜய்யின் புகைப்படங்கள் வெளியான நிலையில், அவரது அறிவுறுத்தலின்படி கட்சியினரும் தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு அவரது கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பொதுவாக பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலத்தில் தான் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி வந்தார். இதுதொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது முதன்முறையாக வெளியே வந்து அம்பேத்கருக்கு மரியாதை செய்துள்ளார் விஜய்.