பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன்?: விஜய் சேதுபதி

Published On:

| By Balaji

பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ரவுடி பினு தனது பிறந்தநாளைப் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி கொண்டாடியது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இளைஞர்கள் சிலர் தங்களது பிறந்தநாளைப் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது தொடர்கதையாகி வந்தது. இவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனிடையே மூன்று தினங்களுக்கு முன்பாக பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

இளைஞர்கள் சிலர் ஹீரோக்களின் செயல்களைப் பின்பற்றும் நிலையில் விஜய் சேதுபதியின் செயலுக்கு விமர்சனங்கள் எழுந்தன.

ADVERTISEMENT

இதுதொடர்பாக விஜய் சேதுபதி வெளியிட்ட அறிக்கையில், “எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அதில் பிறந்த நாள் கேக்கினைப் பட்டாக்கத்தியால் வெட்டியிருப்பேன். பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக்கத்தி முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும். எனவே படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share