2026 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூர், வேலுச்சாமிபுரத்தில் நண்பகல் 12.00 மணிக்கும் இன்று அவர் பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.
அதன்படி இன்று காலை முதலே கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
விஜய்யின் பிரச்சாரத்திற்காக கே.எஸ்.திரையரங்கம் அமைந்துள்ள சேலம் – நாமக்கல் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் தொண்டர்களின் கூட்டம் காரணமாக அச்சாலையில் காலை 8 மணி முதல் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனையடுத்து நாமக்கல் – திருச்செங்கோடு செல்லும் வாகனங்கள் உழவர் சந்தை வழியாக செல்லவும், சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்லவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே காலை 8.45 மணிக்கு தான் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டுள்ளார் விஜய். அங்கிருந்து சாலை வழியாக நாமக்கல் பிரச்சார பகுதிக்கு செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகும் நிலையில் நண்பகல் 12 மணிக்கு தான் அங்கு விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

அதோடு விஜய் பிரச்சாரத்தை முன்னிட்டு கரூர், நாமக்கல் மாவட்டத்தில் விஜய் பிரச்சார வாகனம் செல்லும் ஒவ்வொரு பாய்ண்டிலும், பொதுமக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் தலா 300 தன்னார்வலர்களுக்கு தவெக தலைமை பயிற்சி அளித்துள்ளது என நமது மின்னம்பலம்.காம் தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி நாமக்கல் கே.எஸ் திரையரங்கம் பகுதியில் இன்று காலை முதலே தொண்டர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் சீருடை அணிந்த தன்னார்வலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் இது தவிர தொண்டர்கள் தாகத்தை தணிப்பதற்காக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், தயார் நிலையில் ஆம்புலன்ஸ், மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
