பீஸ்ட் டிக்கெட் விலை உயர்வு: காரணம் யார்?

Published On:

| By admin

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் அல்லது முதல் காட்சியில் தங்கள் விருப்ப நாயகனின் படத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வெறித்தனமான ரசிகர்கள் ஏராளம். இவர்களது ஆர்வத்தை திரையரங்குகள் பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கட்டுகளை விற்பனை செய்வதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படும்.

இதனை இன்றுவரை திரையரங்குகள், அல்லது அரசு தரப்பில் ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. வருகின்ற ஏப்ரல் 13 அன்று சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ வெளியாகிறது. இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் படம் வெளியாகும் தினமான ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 4 மணி காட்சி, காலை 7 மணி காட்சிகள் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அதற்கான டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிக பட்சமாக டிக்கெட் விலை 190 ரூபாய் வரை உள்ள நிலையில் அந்த டிக்கெட்டுகளின் விலை 2000 ரூபாய் வரை விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தைத் தயாரித்திருப்பது திமுக ஆதரவு நிறுவனமான சன் பிக்சர்ஸ், படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்.

ஆளும் கட்சியின் ஆதரவு நிறுவனங்களின் படம் என்பதால் அது சம்பந்தமான எந்த முறைகேடாக இருந்தாலும் அரசு எந்திரம் கண்டுகொள்வது இல்லை என்கிற குற்றச்சாட்டு திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம் எழுப்பபடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு சமீபத்திய உதாரணம் பீஸ்ட் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அரசு உரிமம் பெறுகிறபோது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டு படம் திரையிடப்பட வேண்டும் .

ADVERTISEMENT

ஆனால் திருநெல்வேலியில் உள்ள ராம் – முத்துராம் திரையரங்கில் பீஸ்ட் படத்தின் டிரைலர் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்ததால் தியேட்டரில் இருந்த அனைத்து இருக்கைகளும் சேதமடைந்தன,

அதே போன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டு டிரைலர் திரையிடப்பட்டது. அதனால் 5000க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் கூடியதால் போக்குவரத்து முடங்கியதால் வடபழநி, எக்மோர், அம்பத்தூர் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ,கட்டண அடிப்படையில் பார்வையாளர்களை அனுமதித்து படங்கள் திரையிடப்பட வேண்டும் இது போன்ற செயல்களால் ஏற்படும் நல்லது கெட்டதற்கு திரையரங்கு உரிமையாளர்களே பொறுப்பு என கூறியிருந்தார்.

இந்த சூழலில் பீஸ்ட் படத்தை திரையிட உள்ள சில திரையரங்க உரிமையாளர்களிடம் பேசியபோது டிக்கெட் அதிகமான விலைக்கு விற்கப்படுவதற்கு காரணம் ரசிகர்களே. அதிக விலைக்கு விறகப்படும் டிக்கெட்டுகளை வாங்கி படம் பார்ப்பதில்லை என்கிற சுய கட்டுப்பாட்டுடன் நடக்கத்தொடங்கினாலே டிக்கெட் விலை அதிகரிக்காது. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் பற்றி கேலி கிண்டல், மீம்ஸ்போடக்கூடாது அதையும் மீறினால் விஐய் நற்பணி இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என சில தினங்களுக்கு முன் விஜய் தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கையில் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் டிக்கெட் விற்பனை செய்தால் வாங்காதீர்கள் என விஜய் கூறியிருந்தாரா என கேள்வி எழுப்பினார். எவ்வளவு விலை வைத்து டிக்கெட் விற்றாலும் ஆளும்கட்சி பிரமுகர் தயாரித்துள்ள படம் என்பதால் என்ன விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்புகின்றனர். முதல் ஐந்து நாட்களில் பீஸ்ட் படம்100 கோடி ரூபாய் வசூல் இலக்கை எட்டவேண்டும் என்கிற திட்டமிடல் தயாரிப்பு/விநியோகஸ்தர்களிடம் உள்ளது அதனால் டிக்கெட் விலையை அதிகரித்துவிற்க வேண்டியுள்ளது என்கின்றனர் திரையரங்குகள் வட்டாரத்தில்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share