12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற நடிகர் விஜய் விருது வழங்கும் விழா நேற்று இரவு நிறைவு பெற்றது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பரிசளிக்கத் திட்டமிடப்பட்டது. இதனை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தித்து அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி நீலாங்கரையில் நேற்று காலை 11 மணிக்கு விழா தொடங்கியது.
நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கு விஜய் பரிசு, சான்றிதழ் வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இதில் சில மாணவ மாணவிகள் எங்களின் பெற்றோர்தான் இந்த வெற்றிக்குக் காரணம், அவர்கள் தான் கவுரவிக்கப்பட வேண்டும் என்று கூற அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் 600/600 பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார். விஜய்யிடம் இருந்து பரிசு பெற்ற மாணவர் ஒருவர் மாஸ்டர் பட ஜேடி – பவானி ஸ்டைலில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய், ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது, மனிதனுக்கு குணம்தான் முக்கியம், சமூக வலைதள பயன்பாடு” என பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே நின்று கொண்டே மாணவர்களுக்குப் பரிசளித்ததால் அவர் களைப்பானதாகவும் கூறப்பட்டது.

இறுதியாக சுமார் 12 மணிநேரத்துக்கு பிறகு நேற்று இரவு சுமார் 11 மணியளவில் நடிகர் விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் விஜய் ‘ரஞ்சிதமே’ பாடல் ஸ்டைலில் முத்தம் கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்தார்.
விஜய் அரசியலில் குதிப்பார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அவர் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரியா
திருப்பூரில் மூடப்பட்ட 40% பின்னலாடை நிறுவனங்கள்: காரணம் என்ன?
