டாம்க்ரூஸ்
நடிகர் விஜய்யை அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பக் காரணமாக இருந்த திரைப்படம், விக்ரமன் இயக்கிய ‘பூவே உனக்காக’. அப்படம் தந்த அடித்தளத்தை மேலும் வலுவாக்கி, விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது பாசிலின் ‘காதலுக்கு மரியாதை’.
அவற்றில் ஏற்ற பாத்திரங்கள் போன்று இல்லாவிட்டாலும், அக்காலகட்டத்தில் விஜய் நடித்த இதர படங்களில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று ரசிகர்கள் கருதும் விதமாகவே தோன்றியிருப்பார். அவற்றில் இருந்து வெகுவாக விலகி நின்ற படம் ‘பிரியமுடன்’.
முழுக்க முழுக்க விஜய் ‘நெகடிவ்’வான ஒரு பாத்திரத்தில் நடித்த படம் அது. புதுமுக இயக்குனராக வந்த வின்சென்ட் செல்வாவின் கதை பிடித்துப் போன காரணத்தால், அவர் அதனை ஏற்று நடித்ததாகச் சொல்லப்பட்டது.
பின்னாட்களில் ‘அழகிய தமிழ்மகன்’, ’கத்தி’ படங்களில் இரட்டை வேடம் ஏற்று நடித்தபோது, அவற்றில் இதே போன்ற பாத்திர வார்ப்பினை ஏற்றிருந்தார். அந்த வகையில், விஜய்யின் திரை வாழ்வில் வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்திய படம் என்றும் இதனைச் சொல்லலாம்.
‘பிரியமுடன்’ கதை!
‘தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்றெண்ணும் உள்ளம் கொண்ட ஒரு இளைஞன் வசந்த் (விஜய்). தனக்குப் பிடித்ததை வேறு எவரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றெண்ணும்போது மட்டுமே, தனது மூர்க்க குணத்தை வெளிப்படுத்துவார். இதர நேரங்களில் மிகச்சாதாரண மனிதராகத் தன்னைச் சுற்றியுள்ளவர்களோடு நட்போடும் பாசத்தோடும் பழகி வருவார்.
வசந்தின் நட்பு வட்டம் பெரிது என்றபோதும், அவரது நெருங்கிய நண்பராக இருப்பவர் வசந்தகுமார் (சுஜித் சாகர்). நண்பர்கள் உடன் சேர்ந்து இருவரும் ஜெய்ப்பூர் செல்கின்றனர். அங்கு பிரியாவைப் (கௌசல்யா) பார்க்கிறார் வசந்த். பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.
ஒரு விபத்தில் பிரியாவுக்கு அடிபட, அந்த நேரத்தில் ரத்தம் கொடுத்து உதவுகிறார் வசந்தகுமார். ஆனால், மயக்கத்தில் இருந்த பிரியா அவரைப் பார்க்கவில்லை. உடல்நலம் தேறியதும், அவர் வசந்தகுமாரைச் சந்திக்க விரும்புகிறார்.
அதையடுத்து, சென்னையில் வசந்தகுமார் தங்கியிருக்கும் வீட்டுக்கு போன் செய்கிறார். அந்த வீடு வசந்த் உடையது. வசந்தகுமாரைத் தேடி ஒரு பெண் வருவதாக எண்ணும் வசந்த், ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார்.
அங்கு பிரியாவைப் பார்த்ததும் ‘ஷாக்’ ஆகிறார். நண்பனைத் தேடி வந்த பெண்ணிடம், ‘நான் தான் ரத்தம் கொடுத்தேன்’ என்று பொய் சொல்கிறார். அந்த அறிமுகம் இருவருடைய நட்பையும் இறுக்கமாக்குகிறது. மெல்ல அது காதலாக மலர்கிறது. அது வசந்த் வாழ்வில் ஒரு வசந்தகாலமாக உள்ளது.
எல்லாமே சுமூகமாகப் போய்க் கொண்டிருப்பதாக வசந்த் எண்ணுகையில், பிரியாவின் தந்தை ரங்கராஜன் (ஜெய்கணேஷ்) சென்னைக்கு வருகிறார். பிரியாவுக்கு ரத்தம் கொடுத்து உதவியது வசந்த்குமார் என்ற உண்மை அவருக்குத் தெரியும்.
பிரியா தான் வசந்த்குமாரைக் காதலிப்பதாக ரங்கராஜனிடம் சொல்ல, அவரும் ‘உன் காதலனை வரச் சொல்’ என்கிறார். ஆனால், அவர் முன்னே வந்து நிற்பதோ வசந்த். தனது மகளிடம் வசந்த் பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்று அறிந்ததும், ரங்கராஜன் கோபமுறுகிறார். வசந்தை திட்டித் தீர்க்கிறார்.
உண்மையைப் பிரியாவிடம் சொல்லப் போவதாகக் கூறுகிறார். அந்த நொடியில், ரங்கராஜனைக் கொலை செய்யும் எண்ணம் வசந்துக்குள் மேலோங்குகிறது. அவ்வாறே செய்துவிடுகிறார்.
அதன்பிறகு, ஏதும் அறியாதவர் போலப் பிரியாவுடன் அவர் இருந்து வருகிறார்.
ஆனாலும், அவர் பிரியாவிடம் மறைத்த உண்மைகள் அவரை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. இந்த நிலையில், ‘அந்த உண்மைகள் தனக்கும் தெரியும்’ என்று வசந்திடம் சொல்கிறார் வசந்த்குமார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவரையும் கொன்றுவிடுகிறார் வசந்த்.
தான் செய்தது எதையும் பிரியா தெரிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் வசந்த். தன்னிடம் இருக்கும் மூர்க்க குணத்தைக் கைவிட்டு, இயல்பான மனிதனாக வாழ முடிவெடுக்கிறார். பிரியாவோடு ஜெய்ப்பூர் செல்கிறார்.
அங்கு, வசந்த் குறித்த உண்மைகள் பிரியாவுக்குத் தெரிய வருகிறது. அப்போதும், ‘தனது அதீத காதல் காரணமாகவே அந்த குற்றங்களைச் செய்தேன்’ என்கிறார் வசந்த். அதனைப் பிரியா ஏற்றாரா, இல்லையா என்பதோடு அப்படம் முடிவடையும்.
பிரியா என்ற பெண் மீது ‘அதீத’ பிரியமுடன் இருந்த வசந்த் எனும் பாத்திரத்தில் விஜய் தோன்றியது, அந்த காலகட்டத்தில் கலவையான விமர்சனங்களைப் பெறக் காரணமாக அமைந்தது.
விஜய்யின் நடிப்பு ‘தூள்’ என்று சிலர் சொன்னாலும், ‘விஜய்யை நெகட்டிவ் பாத்திரத்தில் ஏற்க முடியவில்லை’ என்று சில ரசிகர்கள் கூறினர். அதையும் மீறி, ‘பிரியமுடன்’ படம் பல திரையரங்குகலில் 100 நாட்களைக் கடந்தது.
கமர்ஷியல் பார்முலா!
ஷாரூக்கான் நடித்த ‘பாஸிகர்’, ‘டர்’ படங்களின் சாயலைக் கொண்டிருந்தாலும், ‘பிரியமுடன்’ முழுக்க முழுக்கத் தமிழில் வெளியான கமர்ஷியல் மசாலா படங்களுக்கான பார்முலாவிலேயே அமைந்தது.
விஜய் நடித்த இதர மசாலா படங்களில் இருந்து பெரிதாக விலகாத வகையிலேயே அதன் உள்ளடக்கத்தை வடிவமைத்திருந்தார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. பாரதிக்கு கண்ணம்மா, பூஜா வா பூஜா வா, மௌரியா, ஒயிட் லக்கான் கோழி, ஆகாஷவாணி பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
விஜய்யின் ஜோடியாக கௌசல்யா நடித்திருந்தார். ஏற்கனவே இந்த ஜோடி ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்திருந்தது. பிறகு, ‘திருமலை’யில் ரகுவரன் மனைவியாகத் தோன்றியிருந்தார் கௌசல்யா.
சுஜித் சாகர், ஜெய்கணேஷ், நாசர், மணிவண்ணன், மதன் பாப், டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்தனர். விஜய்யின் நண்பர்களில் ஒருவராக, அவரது தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர் நடித்திருந்தார்.
சிபிஐயைச் சேர்ந்தவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றியிருந்தார். வேறு படங்களில் அவர்களை இவ்வாறு ரசிகர்கள் கண்டிருக்க முடியாது. விஜய் மில்டன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கண்கவர் காட்சியமைப்பைக் கொண்டிருந்தன.
பி.எஸ்.வாசு – சலீம் படத்தொகுப்பு செறிவாக அமைந்து, திரைக்கதையில் இருக்கும் விறுவிறுப்பை ரசிகர்களுக்குக் கடத்தியது. இந்த படம் பெற்ற வரவேற்பினால், பின்னர் ‘இரணியன்’, ’யூத்’, ‘ஜித்தன்’ என்று பல படங்களை இயக்கினார் வின்சென்ட் செல்வா. அவரது இயக்கத்தில் தற்போது ‘கும்மாட்டிக்களி’ எனும் திரைப்படம் மலையாளத்தில் தயாராவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பிரியமுடன்’ படத்திற்குப் பிறகு, சரியாக ஓராண்டு கழித்து வெளியானது எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘வாலி’. அப்படத்தில் அஜித் ஏற்ற இரட்டை வேடங்களில் ஒன்று முழுக்க முழுக்க ‘நெகடிவ்’ பாத்திரமாக அமைந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த ‘பிரியமுடன்’ படமானது 1999ஆம் ஆண்டு ஜுன் 13ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகின்றன என்பது நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது.
விஜய் நடித்த ‘ஹிட்’ திரைப்படங்களில் ஒன்று என்பதைத் தாண்டி, வித்தியாசமான பாத்திரமொன்றில் அவரை ரசிகர்கள் கண்ட படம் என்ற வகையிலும் சிறப்பினைப் பெறுகிறது ‘பிரியமுடன்’.
2,000க்கு பிறகு அவருக்கு ரசிகர்களான கண்மணிகளுக்கு அந்த விஷயம் எந்தளவுக்கு ஈர்ப்பினைத் தரும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு வளரும் நட்சத்திரமாக விஜய்யைக் கண்டவர்களுக்கு இந்த படம் ஒரு ‘மைல்கல்’லாகவே தெரியும்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழிசையை மேடையில் வைத்து கண்டித்த அமித்ஷா?
“கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ்மீட்” : தமிழிசையை கட்டுப்படுத்தும் அண்ணாமலை?