”அன்றே சொன்னோம்” : ராகுல், பிரியங்கா, கனிமொழி உள்ளிட்ட எம்.பிக்கள் கைது – விஜய் கண்டனம்!

Published On:

| By christopher

vijay condemns for mps arrested by delhi police

டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல்காந்தி தலைமையிலான இந்திய கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாக்கு திருட்டு மற்றும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக மனு அளிக்க டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 11) நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சுமார் 300 எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.

ஆனால் சிறிது தூரத்திலேயே இரும்பு தடுப்புகளைக் கொண்டு எம்.பி.க்கள் அனைவரையும் டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன்படி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

ADVERTISEMENT

மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share