அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ஆம் தேதி நடைபெற்றது. vijay aiadmk alliance edappadi
இந்தக் கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி-க்கள் கலந்து கொண்டனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு ஆதரவு, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “நாம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு காரணம், பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நம்முடன் (அதிமுக) கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக விரும்பினார்கள்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில், வேண்டாம் என்று விலகிப் போனார்கள். இப்போது நம்மோடு கூட்டணி வைக்க மீண்டும் பாஜக தலைவர்கள் விரும்புகிறார்கள். முன்பு பாஜகவோடு கூட்டணி வைத்தால் திமுகவினர் சிரிப்பார்கள். ஆனால், இப்போது கூட்டணி அமைத்தவுடன் ஏன் பயப்படுகிறார்கள்?
நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்று திமுகவுக்கு பயம் உருவாகிவிட்டது. நமது கூட்டணியைப் பற்றி சோஷியல் மீடியாவிலோ, பொதுவெளியிலோ யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. யார் மீதும் தனிப்பட்ட விமர்சனம் இருக்கக்கூடாது.
நமது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரவேண்டியுள்ளது. குறிப்பாக விஜய் கட்சியை (தவெக) யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். நீங்கள் கூட்டணிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சிப் பணியாற்றுங்கள்.

பூத் கமிட்டி உறுப்பினர் நியமனத்தில் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் என பொறுப்பில் உள்ளவர்களே அவரவர்களுக்கு வேண்டியப்பட்டவர்களையும் உறவினர்களையும் நியமித்துள்ளீர்கள். அதையெல்லாம் தவிர்த்துவிட்டு, கட்சிப் பணியில் ஆர்வமுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனைகளை கையில் எடுங்கள். அதைப் போராட்டமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் எடுத்து மக்களிடம் செல்லுங்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் அதிமுக தான். அதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
நாம் பாஜகவில் கூட்டணியில் இருந்தாலும், எந்த சூழலிலும் கொள்கையில் இருந்து மாற மாட்டோம், கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக தான் இருக்கிறோம்” என்று எடப்பாடி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி வியூகம் குறித்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, “தவெக தலைவர் விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிக்க வேண்டாம் என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லியிருக்கிறார். அதனால், தவெகவும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார்கள். vijay aiadmk alliance edappadi
