அதிமுகவைச் சேர்ந்த, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார்.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களில் ஊழல் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 22) சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் 20 இடங்களிலும், சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் சாய் கிருபா அப்பார்ட்மெண்ட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையை முன்னிட்டு விஜயபாஸ்கர் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அதுபோன்று, அதிமுக நிர்வாகிகளும் விஜயபாஸ்கர் வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
