மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின நபரின் முகத்தில் பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் குபாரி பஜார் பகுதியில் பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் ஒருவர் பழங்குடியின நபர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிகெரட் பிடித்தபடி இருக்கும் அவர் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழிக்கிறார். பலரும் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சிதி மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ எனது கவனத்திற்கு வந்தது. குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சிதி மாவட்டத்தில் பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழிக்கும் கொடூர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பழங்குடியின நபர் மீது நடத்தப்பட்ட இந்த கேவலமான கீழ்த்தரமான செயலுக்கு நாகரீக சமுதாயத்தில் இடமில்லை. சிறுநீர் கழிக்கும் நபர் பாஜகவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலில் மத்திய பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்திற்கு அவமானத்தை தேடி தரும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீதான வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.