விடாமுயற்சி: ரசிகருக்கு ‘ஸ்வீட்’ சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்

Published On:

| By Manjula

vidaamuyarchi ajith meets his fan

vidaamuyarchi ajith meets his fan

நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பின் நடுவில் தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், திரிஷா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அஜித் பிறந்தநாள் பரிசாக இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 26-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து பெரிதாக எந்தவொரு அப்டேட்டினையும் படக்குழு வெளியிடவில்லை.

ஆனால் சமீபகாலமாக அஜித் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.

இந்த நிலையில் ஷூட்டிங் இடைவேளையில் ரசிகர் ஒருவருடன் விருந்தில் கலந்து கொண்டு, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் அஜித்.

இதுகுறித்து அந்த ரசிகர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”சென்னையில் சந்தித்ததில்லை. ஆனால், அஜர்பைஜானில் அஜித் அவர்களை நான் சந்திப்பது இது மூன்றாவது முறை.

முன்பு அவர் இந்தியத் தூதரகத்துக்கு வந்தபோது நாங்கள் எல்லோருமே அவரது சகா இறந்த துயரத்துடன் அதுகுறித்த முக்கிய வேலையில் இருந்தோம்.

அப்போதே, யாரிடமோ சொல்லிவிட்டுவிடாமல், அவரே நேரடியாக இறந்தவரின் குடும்பத்தினருடன் இரண்டுமுறை தூதரகத்துக்கு வந்து எல்லா விஷயங்களும் முடியும் வரை இருந்து நடத்தியது எனக்கும் நெகிழ்வாக இருந்தது.

இம்முறை “விடாமுயற்சி” படப்பிடிப்பின் இடையில் கிடைத்த ஒரு நேரத்தில் எங்களது மாலை விருந்துக்கு வந்து நிதானமாக இருந்து, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்து, பிடித்ததைச் சாப்பிட்டு, கதை சொல்லி, கதை கேட்டு, உணவகத்தின் சமையல்காரரை அவரே போய் பாராட்டிவிட்டு வந்து மனதுக்குக் குளிர்ச்சியாய் இருந்தார்.

‘தல’ விசிறியான வைதேகிக்கும் அவ்வளவாக விஷயம் தெரியாத எனக்கும் சரிசமமாய் ஈடுகொடுத்து உரையாடினார். குடும்பம், பிள்ளைகள், மோட்டார்பைக், சைக்கிள் பயணங்கள், பிடித்த உணவுகள் என்று உரையாட இன்னும் நிறையவே இருந்தன.

நடிகர்கள் ஆரவ், நிக்கில் ஆகியோரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் கலைப்பயணம் சிறக்க வாழ்த்தினோம். படப்பிடிப்புக் குழுவினரும் வந்திருந்ததால், வெளிநாட்டில்—முக்கியமாக அஜர்பைஜானில்—படம் எடுப்பது பற்றியும் நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது.

எனக்குப் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதற்கான முதலீடு செய்து, அதன் கனிகளை ரசிக்கும் மனிதர்கள் பிடிக்கும்.

அந்த வகையில் அஜித்தை நிறையவே பிடித்தது. மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறோம். மகிழ்ச்சி,” என புகைப்படங்கள் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வியக்க வைக்கும் விசிக மாநாடு… யார் பார்த்த வேலை இது?

”இசை சொல்லி கொடுத்ததே அவங்க தான்”… கலங்க வைக்கும் யுவன் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share