2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ”எதிர்பாராத மிகப் பெரிய வெற்றி கூட்டணி அமைய இருக்கிறது.. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்.. நிச்சயம் நாம் ஆட்சி அமைப்போம்” என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர இதுவரை வேறு எந்த கட்சிகளும் இணையவில்லை.
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவதும் சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவருமே விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருக்கின்றனர்.
இதனால் அதிமுக மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.
இந்த பின்னணியில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது.
அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையவில்லையே கலக்கத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், “யாரும் எதுக்கும் கவலைப்படாதீங்க.. நிச்சயமா பிரம்மாண்டமான எதிர்பாராத வெற்றிக் கூட்டணியை அமைப்போம். நம்ம ஆட்சிதான் அமையப் போகுது.. அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீங்க தேர்தல் வேலையை மட்டும் செய்யுங்க” என பேசினார் எடப்பாடி பழனிசாமி.
அத்துடன், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துல நீக்கப்பட்ட நம்ம வாக்காளர்களை மறுபடியும் சேர்க்குறதுக்கு எல்லோரும் ரொம்பவே முயற்சிக்கனும்.. அந்த வேலையை சீக்கிரமாக முடிக்கனும்” என்றும் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
