நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான மாண்புமிகு ஜே.பி. நட்டா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
