”பேட் கேர்ள் தான் எனது தயாரிப்பு நிறுவனத்தின் கடைசி படம். அதோடு கடையை சாத்துறோம்” என வேதனையுடன் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 1) அறிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபில்ம்ஸ் தயாரிப்பில், வர்ஷாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பேட் கேர்ள்’. இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய வெற்றிமாறன், “பதின்ம வயதில் நுழையும் பெண்ணுக்கு பாலியல் குறித்து எழும் கேள்விகளையும், அவளது உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது பேட் கேர்ள் திரைப்படம். இப்படம் முழுக்க முழுக்க வர்ஷாவின் படைப்பு தான்.
இன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளராக இருப்பது ஒரு டாக்ஸிக் ஆன வேலை. ஆனால் இயக்குநராக இருந்தால் ஜாலியாக பணியாற்றலாம். ஆனால் தயாரிப்பாளராக இருந்தால், டீசருக்கு கீழ் வரும் கமெண்ட்ஸில் இருந்து அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய உள்ளது. இதெல்லாமே படத்தின் வணிகத்தை பாதிக்கும் எனும்போது ஒரு வித நெருக்கடி மனதில் ஏற்படுத்துகிறது.
பேட்கேர்ள் படத்தின் டீசரை பார்த்துவிட்டு, சிலர் ஒருவித அதீத உணர்வுடன் கருத்து தெரிவித்தனர். ஆனால் படத்தில் அவர்கள் பயப்படும்படி ஒன்றும் இல்லை.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மனுஷி விரைவில் வெளிவர உள்ளது. பேட் கேர்ள் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ -16 சான்றிதழ் கொடுத்துள்ளது. ஒரு படத்தை யார் பார்க்கலாம், எந்த காட்சிகள் வரலாம் என்பதை தீர்மானிப்பது தணிக்கை வாரியம் தான்.
ஒரு தயாரிப்பாளராக படத்தை எடுத்து வெளியிடுவதற்குள் பல நெருக்கடிகள் வருகிறது. அதிலும் பைனான்சியரிடம் இருந்து கடன் பெற்று படம் எடுக்கும் என்னை போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்கு இத்தகைய நெருக்கடிகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
அதனால் பேட் கேர்ள் தான் கிராஸ் ரூட் ஃபில்ம்ஸின் கடைசி படமாக இருக்கும். அதன் பிறகு கடையை சாத்துகிறோம்” என வேதனையுடன் வெற்றிமாறன் தெரிவித்தார்.
