திரையரங்கில் தீண்டாமை: வெற்றிமாறன் கண்டனம்!

Published On:

| By Monisha

narikuravar not allowed in rohini theatre

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு படம் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பத்து தல படம் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவ மக்கள் 5-க்கும் மேற்பட்டவர்கள் சென்றிருந்தனர்.

ஆனால் அவர்கள் உள்ளே செல்ல திரையரங்க ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் படம் பார்க்காமல் திரும்பி சென்ற நரிக்குறவ மக்களிடம் டிக்கெட் வாங்கி கொடுத்தவர்கள் காரணம் கேட்டபோது, அவர்கள் நடந்ததை கூறியுள்ளனர்.

இதனால் அவர்களை உள்ளே அனுமதிக்குமாறு அங்கிருந்த மற்ற பார்வையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களைப் பெற்றது.

இதனையடுத்து ரோகிணி திரையரங்க நிர்வாகம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது.

அதில், “நரிக்குறவ குடும்பத்தினர் 6 முதல் 10 வயதுடைய குழந்தைகளை அவர்களுடன் அழைத்து வந்தனர். பத்து தல படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடாது என்பதால் தான் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் மற்ற பார்வையாளர்கள் இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் பார்த்ததால் பின்னர் அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.

நரிக்குறவ மக்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டாலும், இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தான் இயக்குநர் வெற்றி மாறன், திரையரங்கில் தீண்டாமை ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (மார்ச் 31) அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைப்பிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாகப் பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில் தற்போது வெற்றி மாறனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

கலாஷேத்ரா பாலியல் புகார்: மாணவிகள் முதல்வருக்கு கடிதம்!

உலக வங்கி தலைவராகும் இந்திய வம்சாவளி !

திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share