தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. மேலும் 46 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிட்வா புயலின் தாக்கத்தால் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எண்ணூர், செங்கல்பட்டில் தலா 15 செ.மீ மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, சேத்துப்பட்டில் 13 செ.மீ மழையும், திருமயம் சென்னை, விம்கோ நகர், தாமரைப்பாக்கம் பகுதிகளில் 12 மழையும் பெய்துள்ளது.
மேலும் மணலி புதுநகர், திருக்கழுக்குன்றம், மேடவாக்கம், திருவாரூர் குடுமியான் மலை, இலுப்பூரில் தலா 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மேலும் சென்னை பள்ளிக்கரணை, மாமல்லபுரம், வடக்குத்து, கேளம்பாக்கம், செங்குன்றம், உளுந்தூர் பேட்டை பகுதிகளில் 10 செ.மீ மழையும், தொண்டி, ஒக்கியம் துரைப்பாக்கம், பொன்னேரி, திருவாரூர், கத்திவாக்கம், அம்பத்தூர், பொள்ளாச்சி பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது” என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

