தமிழக ஆளுநர் பற்றிய தீர்ப்பு – இருமுனைக் கத்தி!

Published On:

| By Minnambalam Desk

Verdict on the TN Governor

சுரேந்திர குமார் Verdict on the TN Governor

தமிழ்நாடு மாநிலத்திற்கும் தமிழக ஆளுநருக்கும் இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதி அளித்த 414 பக்கத் தீர்ப்பு, அண்மைக்கால இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் கூட்டாட்சி உறவுகளில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாகும்.

ஆளுநர் நடவடிக்கை பற்றி அரசியலமைப்பு அமைதியாகவே இருக்கிறது. அந்த நடவடிக்கைக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிப்பதன் மூலம் கூட்டாட்சி, அதிகாரங்களைப் பிரித்தல், அரசியலமைப்பு நிர்வாகத்தின் எல்லைகள் ஆகியவற்றை நீதிமன்றம் மறுவடிவமைத்துள்ளது. Verdict on the TN Governor

இந்தத் தீர்ப்பு அதிகாரங்களைப் பிரித்தல், “நீதித்துறையின் மேலாதிக்கம்” ஆகியவை பற்றிய ஆழமான கேள்விகளையும் எழுப்புகிறது. நீதித்துறை தன்னிடமுள்ள கூடுதலான அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் நிர்வாகத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழ்நிலையாக இதை சட்ட அறிஞர் ரான் ஹிர்ஷல் கருதுகிறார்.

அரசியல் சாசனத்தின் தேக்கம் Verdict on the TN Governor

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய பல மசோதாக்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக ஆளுநர் தாமதப்படுத்திய அசாதாரண சூழ்நிலையால் இந்த வழக்கு உருவானது. 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக (ஜனவரி 2020முதல் நிலுவையில் உள்ளன) மாநில அரசு தாக்கல் செய்த புகார் மீது நவம்பர் 2023இல் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு, ஆளுநர் இந்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தார். Verdict on the TN Governor

சட்டமன்றம் பெரிதாகத் திருத்தம் ஏதும் இல்லாமல் இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது. அரசியலமைப்பின் 200ஆவது பிரிவின் முதல் அம்சத்தின்படி, இப்படி மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்குப் பதிலாக, ஆளுநர் இந்த மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார். இது நிலுவையில் உள்ளது. Verdict on the TN Governor

​​பிரிவு 200 மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு மூன்று தேர்வுகளை வழங்குகிறது: ஒப்புதல் வழங்குதல், ஒப்புதலை நிறுத்திவைத்தல், பரிந்துரைகளுடன் அதை திருப்பி அனுப்புதல் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புதல்.

ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைத்தால், பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுடன் மசோதாவை “விரைவில்” திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரிவு 200 கூறுகிறது. சட்டமன்றம் மசோதாவை மீண்டும் நிறைவேற்றினால் (மாற்றங்களுடன் அல்லது மாற்றமில்லாமல்), ஆளுநர் ஒப்புதலளிப்பதை நிறுத்திவைக்கக் கூடாது.

இருப்பினும், “முடிந்தவரை விரைவில்” என்ற சொற்றொடரில் உள்ள தெளிவின்மை, சில ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதலைக் காலவரையின்றி தாமதப்படுத்தக் காரணமாகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு Verdict on the TN Governor

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஆளுநர் நடவடிக்கைக்கு வெளிப்படையான காலக்கெடுவை விதிக்க, “முழுமையான நீதியைச் செய்வதற்குத் தேவையான ஆணையை பிறப்பிக்க அல்லது அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க” தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது. Verdict on the TN Governor

ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைக்க அல்லது மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவுசெய்தால், அத்தகைய நடவடிக்கை அமைச்சர்கள் குழுவின் உதவியுடனும் ஆலோசனையின் பேரிலும் ஒரு மாதத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. Verdict on the TN Governor

அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்கு மாறாக ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைத்தால், மசோதாவை மூன்று மாதங்களுக்குள் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக்கு மாறாக ஆளுநர் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால், அதையும் மூன்று மாதங்களுக்குள் செய்ய வேண்டும்.

ஒரு மசோதா சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டால், ஆளுநர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய 10 மசோதாக்கள் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் “ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கருதப்படுகிறது” என்று நீதிமன்றம் அறிவித்ததுதான் இதில் குறிப்பிடத்தக்கதாகும். இந்த அசாதாரணமான தீர்வு பிரிவு 142ஐ அடிப்படையாகக் கொண்டது. இது உச்ச நீதிமன்றத்தின் “முழுமையான நீதியைச் செய்வதற்கான” அதிகாரமாகும்.

நீதிமன்ற யதேச்சாதிகாரமா? Verdict on the TN Governor

காலவரையின்றி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் செயல் என்று நீதிபதி பர்திவாலா வாதிட்டாலும், “ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருதப்படும்” என்னும் நீதிமன்றத்தின் தீர்வு வெறும் வழிகாட்டுதல் என்பதற்கும் அப்பாற்பட்டது. இது ஆளுநரின் அரசியலமைப்புச் சிறப்புரிமையை மாற்றும் தன்மை கொண்டது.

உச்ச நீதிமன்ற ஆணைகளையும் உத்தரவுகளையும் அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 142, வரலாற்று ரீதியாக விதிவிலக்கான சூழ்நிலைகளுக்கு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு வால்வாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், அரசியலமைப்பில் இருக்கும் மௌனங்களை நிரப்ப அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் எழக்கூடும். 

ஒன்றிய அரசைப் பொறுத்தவரை அதன் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராகக் காலக்கெடுவை நிர்ணயிப்பது தொடர்ந்து செயல்படவில்லை. உதாரணமாக, டிசம்பர் 2023இல், உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீரில் “இயன்ற அளவு விரைவில்” முழு மாநில அந்தஸ்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டபோது, ​​அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு மணிப்பூர் சபாநாயகர் சம்பந்தப்பட்ட கட்சித்தாவல் எதிர்ப்பு வழக்குகளும் அப்படித்தான். கெய்ஷாம் மேகசந்திர சிங் எதிர் மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகர் வழக்கில், தகுதி நீக்கம் தொடர்பான விஷயங்களை முடிவு செய்ய சபாநாயகர்களுக்கு நீதிமன்றம் மூன்று மாதக் காலக்கெடுவை விதித்தது. அரசியலமைப்புச் சட்டப் பணியாளர் காலவரையின்றிச் செயல்படாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைத்துவிடும் என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

நீதித்துறை விதித்த காலக்கெடு எல்லாச் சமயங்களிலும் அப்படியே பின்பற்றப்படுவதில்லை. மத்தியில் அதிகாரத்தில் உள்ள கட்சி திட்டமிட்டு அரங்கேற்றும் கவிழ்ப்பு நடவடிக்கைகளை நீதித்துறை காலக்கெடு தடுக்கவில்லை என்பதை மத்தியப் பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நடந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

கூட்டாட்சி உறவுகளை மாற்றியமைத்தல்

அமல்படுத்தக்கூடிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம், நீதிமன்றம் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகக் கூட்டாட்சி உறவுகளை மறுசீரமைத்துள்ளது. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்கள் ஆளுநரின் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையின்மையால் காலவரையின்றித் தடைபடாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது.

சட்டமன்றம் மறுபடியும் நிறைவேற்றிய மசோதாக்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும் நடைமுறை குறைக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் தங்கள் சட்டமன்றச் செயல்திட்டங்களை ஆளுநரின் தடைக்கு அஞ்சாமல் செயல்படுத்த அனுமதிக்கிறது.

பத்து மசோதாக்களுக்கு நீதிமன்றம் “ஒப்புதல்” வழங்கியதும், ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழக அரசு அவற்றை அறிவித்ததும், மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் நிலுவையில் இருக்கும்போது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டங்களாக மாறின. இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் முதல்முறையாக இவ்வாறு நடந்துள்ளது 

கேரளம் முதல் மேற்குவங்கம் வரை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் இப்போது ராஜ்பவன்களிலோ குடியரசுத் தலைவர் மாளிகையிலோ முடங்கியிராத நிலை உருவாகலாம். Verdict on the TN Governor

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் மாநிலங்களை ஜனநாயகத்தின் ஆய்வகங்களாகக் கருதினார்கள். அரசியலமைப்பின் பிரதியிலும் நீதித்துறை நடைமுறையிலும் காணப்படும் மையப்படுத்தும் போக்குகள் இங்கு சோதிக்கப்படுகின்றன.

கூட்டாட்சி விவாதங்கள்

ஆளுநர்களுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவை விதிப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் விருப்பத்திற்கு இந்தியாவின் அரசியலமைப்பு எந்திரம் உடனடியாகவும் வெளிப்படையாகவும் பதிலளிக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

கூட்டாட்சி தொடர்பான சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் ஒரு மாநிலத்திற்கு நேரடியான, காத்திரமான நிவாரணத்தை வழங்குவது இதுவே முதல் முறை. இது மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பிய காலக்கெடுவை எதிரொலிக்கிறது.

இருப்பினும், கூட்டாட்சி மற்றும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் குறித்த விவாதம் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை அரசியலமைப்பு அமர்வுக்குப் பரிந்துரைக்கப்படலாம். இந்தக் காலக்கெடுவைப் பின்பற்றத் தவறினால் ஆளுநரை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் இந்த ஆய்வு எவ்வாறு சரியாகச் செயல்படும் – அவமதிப்பு நடவடிக்கைகள், பதவி நீக்க பரிந்துரைகள் அல்லது வேறு வழிமுறை – தெளிவாகத் தெரியவில்லை.

காலக்கெடுவிற்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என விதிப்பதன் மூலம், நீதிமன்றம் சட்டமன்ற சுயாட்சியை வலுப்படுத்தியுள்ளது. தடைசெய்யும் தந்திரோபாயங்கள் மீது கடுமையான நீதித்துறை சோதனைகளை உறுதியளித்துள்ளது. ஆயினும், இது பிரிவு 142இன் நெகிழ்ச்சித்தன்மை, இதை மீறக்கூடிய சாத்தியக்கூறுகள், எதிர்காலத்தில் பிரிவு 143 தொடர்பான குறிப்புகளின் தலைவிதி ஆகியவை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. இது உச்ச நீதிமன்றத்தை ஆலோசிக்கக் குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தையும் குறிப்பிடுகிறது.

அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டியவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதன் மூலம், நீதிமன்றம் இந்தியாவின் கூட்டாட்சி சமநிலையை வலுவான மாநில சுயாட்சியை நோக்கி மறுசீரமைக்க வாய்ப்புள்ளது. நாட்டின் அரசியலமைப்புப் பரிணாமம் தொடரும்போது இந்தச் செல்வாக்கு அதில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

கட்டுரையாளர் குறிப்பு:

சுரேந்திர குமார் ராமையா, சட்டக் கல்லூரியில் அரசியலமைப்புச் சட்டத் துறையின் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்

தமிழில்: தேவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share