திமுக காங்கிரஸ் கட்சி இடையே இன்று காலை தொகுதி பங்கீடு பேச்சு வார்தை நடந்துள்ள நிலையில் தவாக, மஜக, எஸ்டிபிஐ, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகளுடன் இன்று முதல்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. மேலும் மமக மற்றும் IUML கட்சிகளுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 6 சீட் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கூடுதல் இடங்களைத் தாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். நாங்கள் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 6 சட்டமன்ற தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தோம்.
‘நாங்கள் உங்களுடைய கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்’ என்று திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சமூகம் எதிர்நோக்கியிருக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளை குறித்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கையாக முன் வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் நான் வலியுறுத்திய பல கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. உதாரணமாக, ‘இந்திய நாட்டைச் சேர்ந்த எவர் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் வேலை பார்க்கலாம்’ என்கிற நிலையை மாற்றியது, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தது, மற்றும் தலைவர்களுக்கான மணிமண்டபங்கள் போன்றவை ஏற்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரும்போது இந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான ஓய்வு பெற்ற நீதியரசர் குழுவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் மற்றும் பொதுவாக்கெடுப்பு மூலம் தனித் தமிழ் ஈழம் உருவாக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கச் சட்டம் இயற்ற வேண்டும். தனியார் துறையில் 90% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு இருக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் 90% அந்தந்த மாநில மக்களுக்கே கிடைக்க சட்டம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை கட்டாயம் தமிழில் நடத்தப்பட வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்.
வடமாநில தொழிலாளர்கள் வருகையை ‘இன்னர் பெர்மிட்’ (Inner Permit) முறை மூலம் முறைப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடி மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ”
