வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலுக்கு மாவட்ட ஆட்சியரும், மருத்துவமனை டீனும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஒருபக்கம், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கையில், மற்றொரு பக்கம், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு குறித்து புகார் வருவதும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில், தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும்.
இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மாலை மூன்றரை மணியளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மாவட்ட ஆட்சியரும், மருத்துவமனை டீனும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை என்றும், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பால் நோயாளிகள் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை டீன் செல்வி விளக்கம் அளித்துள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது முற்றிலும் தவறான தகவல். உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் கொரோனா நோயாளிகளே இல்லை என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா,சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில், தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
**வினிதா**
