ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை இன்றும், நாளையும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களுடைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , ஆட்டோக்கள் , கனரக வாகனங்கள் ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
குறிப்பாக புதிதாக வாகனம் வாங்கும் எவரும் சென்னையில் பிரசித்தி பெற்ற கோயிலான பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலுக்கு வந்து பூஜை செய்வது வழக்கம்.
சில மாதங்களுக்கு முன் நட்சத்திர ஜோடியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி கூட பாடிகாட் முனீஸ்வரர் கோயிலுக்கு வந்து தாங்கள் புதிதாக வாங்கிய இன்னோவா காருக்கு பூஜை செய்து சென்றனர்.

இந்தநிலையில் ஆயுதபூஜை என்பதால் பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் குவியத் தொடங்கி இருக்கின்றனர். அதிகாலை முதலே ஏராளமானவர்கள் வாகனங்களுடன் படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.
மாவிலை தோரணங்கள் மற்றும் மலர் மாலைகள் சூடி வாகனங்களை அலங்கரித்து இனிப்பு மற்றும் பழங்கள் படையல் இட்டு பூசணி தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் இல்லை.
இந்நிலையில் நடப்பாண்டு பல பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் மற்றும் வாகனங்களுக்கான வழிபாடு களை கட்டி உள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் வழிபாடு மற்றும் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது.
கலை.ரா
‘பொன்னியின் செல்வன்’ கலைஞர்களை பாராட்டி தள்ளிய திருச்சி சிவா
”ஐபிஎல் 2023 தொடரில் பங்கேற்க இரண்டு காரணங்கள்” : டிவில்லியர்ஸ்