சொத்துக்குவிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. veerappandi arumugam asset accumulation case
1996- 2001 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக 1.80 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை குவித்ததாக 2004ல், அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள் ரங்கநாயகி, லீலா மற்றும் மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோர் மீதும் வழக்குப்பாய்ந்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 2006ல் அனைவரையும் சேலம் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, 2012ல் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார். இதனால் அவர் மீதான வழக்கு மட்டும் கைவிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுவித்தது சரி எனக் கூறி, அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றம் சென்றது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டாலும், மற்றவர்கள் மீதான வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறி, வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி 2017ல் உத்தரவிட்டது.

இந்தசூழலில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கும் கைவிடப்பட்டது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை . சொத்து, நிதி பரிவர்த்தனைகள் குறித்த ஆவண ஆதாரங்களுடன் தான் வழக்கு பதிவு செய்துள்ளது.
சொத்துக்கள் தங்கள் சொந்த சம்பாத்தியம் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களால் முன்வைக்கப்படும் வாதங்களை ஏற்க முடியாது.
இந்த சொத்துக்கள் சொந்தமாக சம்பாதித்தவையா இல்லையா என்பதை முழுமையான சாட்சி விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு.
சேலம் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையை சேலம் நீதிமன்றம் தொடங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். veerappandi arumugam asset accumulation case