பொதுத் தொகுதி கேட்கும் திருமா! 

Published On:

| By christopher

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சிகள் இடையே இன்று (ஜனவரி 28) முதல் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஒரு பொது தொகுதி உட்பட மூன்று தொகுதிகளை விசிக தலைவர் திருமாவளவன் கேட்கிறாராம்.

கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தனித் தொகுதியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னத்தில் போட்டியிட்டார் திருமாவளவன். அவருக்கும், அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கடும் இழுபறிக்கு இடையே 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திருமாவளவன்.

அதே போன்று விழுப்புரம் தனித் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் கடந்த 26ஆம் தேதி தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சி சிறுகனூரில் ’வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாட்டை நடத்தி அசத்தினார் திருமா. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தது, லாட்டரி மார்ட்டின் மருமகனான ஆதவ அர்ஜூன்.

இதுகுறித்து நமது மின்னம்பலத்திலும், ’வியக்க வைக்கும் விசிக மாநாடு… யார் பார்த்த வேலை இது?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Image

மேலும்  இணையத்தில் விசிக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேக இணையதள பக்கத்தையும் உருவாக்கியுள்ளார் ஆதவ அர்ஜுன்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திருமா வெளியிட்டுள்ள செய்தியில், ” வரலாற்றுச் சிறப்புமிக்க வெல்லும் சனநாயகம் மாநாட்டில் விசிகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தி வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் நிறுவனர் அன்பு தம்பி ஆதவ அர்ஜூன் மற்றும் அவரது குழுவினர் அதற்கான இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். மேலும் ஆதவ அர்ஜூன் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மூலம் தன்னையும் விடுதலைச் சிறுத்தையாக இணைத்துக்கொண்டுள்ளார். joinvck.com இணையதளத்தில் பதிவுசெய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

ஆதவ அர்ஜூன் நடத்தில் வரும் தி வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தில் (பிரசாந்த் கிஷோர்) ஐ பேக் டீமில் வேலை செய்த சுமார் 25 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த டீம்தான் சமீபத்தில் விழுப்புரம், சிதம்பரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பாராளுமன்றத் தொகுதிகளில் மக்களிடம் சர்வே எடுத்துள்ளது.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உள்ள மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? அவை யாவை? - Quora

ஏன் பொதுத் தொகுதி?

கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதியில் எதற்காக சர்வே எடுத்தனர் என்று நாம் விசாரித்தபோது, ”பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐஜேகே பாரிவேந்தர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டதால், அந்த பெரம்பலூர் தொகுதியை விசிக கேட்கிறது. அப்படி இல்லை என்றால் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்கிறது விசிக.

கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம் சிகாமணி போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது திருக்கோயிலூர் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்று அமைச்சரான பொன்முடி, சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவி மற்றும் அமைச்சர் பதவியை இழந்ததால், எம்.பி கௌதம் சிகாமணி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் கள்ளக்குறிச்சி தொகுதியை குறிவைத்துள்ளது விசிக தலைமை” என்கிறார் விசிக நிர்வாகி.

இதற்கிடையே யாருக்காக பொதுத் தொகுதியைக் கேட்டு திருமா போராடுகிறார் என்று விசிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டோம். ”திருச்சி மாநாட்டை ஒருங்கிணைத்த ஆதவ அர்ஜுன், மாநாட்டில் திருமா முன்னிலையில்  விசிகவில் இணைந்தாரே அது இணைப்பு விழா மட்டும் அல்ல, ஆதவ அர்ஜுனனுக்கு அறிமுக விழா. அவருக்காக தான் பொதுத்தொகுதி கேட்கப்படுகிறது” என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

ஐபிஎல் மட்டும் தான் ஆடுவாரு போல… இளம்வீரரை வறுக்கும் ரசிகர்கள்

’சரியான திசையில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு’ : சல்மான் குர்ஷித்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share