திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பேரூராட்சி நிர்வாகம் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் துரோகம் இழைப்பதாகக் கூறி, நேற்று (அக்டோபர் 28) சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தினர்.
பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த பூட்டுப் போடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
இது தொடர்பாக பேசிய அவர்கள், “சாமளாபுரம் ஒன்பதாவது வார்டு காளிபாளையம் அருந்ததியர் தெருவில் சாக்கடை கட்டித்தர மறுக்கப்படுகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர்களுக்காக செலவிடாமல் பேரூராட்சி நிர்வாகம் அந்த மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. 15-வது வார்டு ஐயம்பாளையத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும்.
வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஒன்பதாவது வார்டு காளிபாளையம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாக்கடை, தார்ச் சாலை, தெருவிளக்கு வசதிகள் மறுக்கப்படுகிறது. நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்து பட்டியலின மக்களை மட்டும் அகற்றி உள்ளனர். எஞ்சிய பிற பிரிவினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை” என்றனர்.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பூட்டுப் போடும் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: வேளச்சேரி – பீச் ரயில் சேவை முதல் ராகவா லாரன்ஸ் படம் அப்டேட் வரை!
விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?
“காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை” : செல்வப்பெருந்தகை