ADVERTISEMENT

திருமாவுக்கு 6 இடங்கள் – இன்று முடிவு!

Published On:

| By Balaji

திமுக கூட்டணியில் இரண்டாவது தொகுதிப்பங்கீடாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று அதற்கான உடன்பாடு கையெழுத்தாகும் என தகவல் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிறுத்தைகள் கட்சி, முன்னாள் சகாக்களான இடதுசாரிகள், ம.தி.மு.க.வுக்கு முன்பிருந்தே திமுக அணியில் இடம்பெற்றது. திமுக நடத்தும் அனைத்து கூட்டு நடவடிக்கைகளிலும் வி.சி.க. பங்கேற்றுவருகிறது. மார்ச் 1 நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் உரையரங்கத்தில்கூட, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் போன்றவர்களுடன் சேர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்துகொண்டார். மத்திய ஆளும் கட்சியான பாஜகவின் நிலைப்பாடுகளுக்கு எதிராக அவ்வப்போது அதிர்ச்சிதரும் கருத்துத் தாக்குதலிலும் அக்கட்சி ஈடுபட்டுவருகிறது.

ADVERTISEMENT

வடமாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு கொண்ட கட்சி எனும் பெயரிலிருந்து மாநிலக் கட்சியாக உருவெடுக்கும் நோக்கத்தில், சிறுத்தைகள் இலக்குவைத்து செயல்படுகிறார்கள். சில ஆண்டுகளாகவே பக்கத்தில் உள்ள கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு அவ்வப்போது விசிட் அடிக்கும் திருமாவளவன் தமிழகம்தாண்டிய செல்வாக்கையும் ஏற்படுத்த விரும்புகிறார். ஒரே காரணம், தேர்தல் ஆணையத்தில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறவேண்டும் என்பதே!

அதற்கு தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகளும் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியும் பெறவேண்டும். அதற்கு குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இந்தத் தேர்தலில் திமுக அணியில் 10 இடங்களையாவது பெற்றால் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றுவிடலாம் என்பது வி.சி.க.வின் கணக்கு. ஆனால் கூட்டணிச் சூழலோ வேறு ஒரு நிலைமையாக இருக்கிறது. அதிமுகவுடன் கடும் போட்டியை எதிர்கொள்ளவேண்டிய திமுகவோ, அதிக தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தங்களின் வெற்றி இலக்கை அடையமுடியும் என்பதில் பிடியாக இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், அதிகாரபூர்வமான முதல் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று திமுகவும் விசிகவும் இரண்டாம் முறையாகப் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவினரும் நேற்று சந்திக்கவே இல்லை.

திமுக தரப்பிலிருந்து திருமாவளவனிடம் தங்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு நேற்று மாலையில் பேசியுள்ளனர். பொதுவெளியிலேயே எதையும் உடைத்துப்பேசும் நேரு போன்றவர்கள் பேச்சில், திருமா சம்மதம் சொல்லிவிட்டார் என்று தகவல்!

ADVERTISEMENT

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, திருமா 8 தொகுதிகளாவது வேண்டும் என நின்றபோது, 5 என திமுக தரப்பு நின்றநிலையில், வி.சி.க.வுக்கு 6 தொகுதிகள் என இறுதியாகியிருக்கிறது.

இன்று காலையில் இது குறித்து அதிகாரபூர்வமான முடிவு அறிவிக்கப்படலாம்; காலையிலேயே தொகுதிப்பங்கீடு முறையாக அறிவிக்கப்படக்கூடும் என்று நம்பகமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

**- பாலசிங்கம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share