அம்பேத்கர், பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை படியுங்கள் என்று நடிகர் விஜய் மாணவர்களிடம் பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 234 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் தலா ரூ. 10,000 ஊக்கத்தொகையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தளபதி மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் வழக்கம் போல் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேசத் தொடங்கினார். அப்போது, “வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஷேர்சேட் ஆகியவற்றில் வரும் தகவல்களில் முக்கால் வாசி தகவல்கள் பொய்யாகத்தான் இருக்கிறது.
சோசியல் மீடியாவில் வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்றால் உங்கள் பாடப்புத்தகத்தை தாண்டி படிக்க வேண்டும். சமீப காலமாக நான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
நீங்களும் உங்களால் முடிந்த வரை படியுங்கள். எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர் , பெரியார், காமராஜர் ஆகியோரை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று மாணவர்களிடம் பேசினார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து விசிக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் விஜய்யின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையைத் தருகிறது. மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அதுவும் விஜய் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்…” என்று குறிப்பிட்டுள்ளது.
மோனிஷா
எஸ்.ஜி.சூர்யா கைது… பழிவாங்கும் நடவடிக்கை- நாராயணன் திருப்பதி
“தமிழகத்தில் தொழில்துறை வேகமாக முன்னேறி வருகிறது” – ஸ்டாலின்
