வெயில் காலம் தொடங்கிவிட்டாலே, மொட்டை மாடியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு வற்றல், வடாகம், ஊறுகாய் வகைகளைத் தயாரிக்கத் தொடங்கிவிடுவார்கள் இல்லத்தரசிகள் பலர். அப்படிப்பட்டவர்களுக்கு சத்தான, சுவையான இந்த வரகுக் கூழ் வற்றல் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வரகரிசி – 500 கிராம்
ஜவ்வரிசி – 100 கிராம்
சீரகம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
புளித்த மோர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சைமிளகாய் – 4
எப்படிச் செய்வது?
வரகரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் கலக்கி புளிக்க விடவும்.
மறுநாள் பெரிய குக்கரில் 4 லிட்டர் தண்ணீர் விட்டு அரைத்த மாவை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். புளித்த மோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்.
இதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக கூழ் காய்ச்சி, ஸ்பூனால் எடுத்து, பாலிதீன் ஷீட்டில், வட்ட வட்டமாக ஊற்றவும். நன்கு காய வைத்து எடுத்து, தேவைப்படும் போது பொரிக்கவும். வரகுக் கூழ் வற்றல் தயார்.