பாமகவின் முதன்மை அமைப்பான வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 9-ந் தேதி மால்லபுரத்தில் தனியார் திருமண அரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பூம்புகாரில் இன்று வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார். இன்று மாலை கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், மனைவி சரஸ்வதி மற்றும் மகள் ஶ்ரீகாந்தியுடன் பங்கேற்றார்.
இந் நிலையில் மகளிர் மாநாட்டின் முகப்பில் அன்புமணி ராமதாஸின் போட்டோ இடம்பெறவில்லை. அதேநேரம் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் போட்டோ பெரிய அளவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
