பாமக சித்திரை முழுநிலவு மாநாட்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. Vanniyar Sangam Chithirai Full Moon
பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” இன்று (மே 11) மாலை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு சென்று கலந்துகொண்டு திரும்ப வரும் வரை எந்தவித பிரச்சினையோ, கலவரமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இன்று மதியம் முதல் வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு அனுமதியோடு மூடப்பட்டன.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
அதேபோல புதுச்சேரியில் இயங்கக்கூடிய மதுபான கடைகளும் மதியம் முதல் மூடப்பட்டன.
எனினும், கடை மூடப்படுவதற்கு முன்பு தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் மாநாட்டுக்கு செல்லக் கூடிய வன்னியர் சங்க இளைஞர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மதுபானங்களை வாங்கி குவித்துக்கொண்டு புறப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணி முதலே மாநாடு நடக்கும் இடத்தில் பார்க்கிங்கில் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. Vanniyar Sangam Chithirai Full Moon
