பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இன்று தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். Vanniyar Property Dispute Emerges in Ramadoss-Anbumani Talks
ராமதாஸ்- அன்புமணி இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் தொடக்கம் முதலே தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் ராமதாஸின் மகள்கள் ஶ்ரீகாந்தி மற்றும் கவிதா. இந்த இருவரும் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்தே தைலாபுரம் தோட்டத்தில் இன்று ராமதாஸை சந்தித்தார் அன்புமணி. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
ராமதாஸ்- அன்புமணி இடையேயான பேச்சுவார்த்தை குறித்து தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், அன்புமணியின் வரவை டாக்டர் ராமதாஸ் கொஞ்சமும் விரும்பவே இல்லையாம். இதனால் அன்புமணி வரும்போது, தோட்டத்தில் வேலை செய்கிற 10 பணியாளர்களை எதிரில் வந்து செல்ல வேண்டும் என ராமதாஸ் உத்தரவிட்டாராம். அத்துடன் பாமக நிர்வாகிகள் யாருமே அன்புமணி வரும் போது வரவும் கூடாது எனவும் ராமதாஸ் கறாராக சொல்லி அனுப்பிவிட்டாராம். இதனால் பாமக நிர்வாகிகள் யாரும் தைலாபுரம் தோட்டத்துக்கு வரவும் இல்லை.
இந்த சூழ்நிலையில் மகளுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த அன்புமணி, ராமதாஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ராமதாஸ் மூத்த மகள் ஶ்ரீகாந்தியும் உடனிருந்தார்.
இச்சந்திப்பின் தொடக்கத்தில், வன்னியர் சங்க சொத்துகள் குறித்துதான் அன்புமணி பேசினாராம். ஏனெனில் பாமகவுக்கு தனியாக சொத்துகள் இல்லை; தற்போது வன்னியர் சங்கம், ராமதாஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது; இந்த சொத்துகள் குறித்துதான் பேசுவதில் அன்புமணி முனைப்பாக இருந்தாராம்.
வன்னியர் சங்க சொத்துகள் குறித்து பேசி முடித்த பின்னரே, பாமக விவகாரங்கள் பேசப்பட்டதாம். பாமகவின் தலைவராகவே அன்புமணி நீடிப்பது; ராமதாஸ் பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பதவி தருவது; கூட்டணி குறித்து ராமதாஸ் மட்டுமே முடிவு செய்வது என்பது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாம். ஆனால் இந்த விவகாரத்தில் ராமதாஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாகவே இருந்தாராம். இருவருக்கும் இடையேயான இந்த சந்திப்பும் பேச்சுவார்த்தையும் சுமார் 45 நிமிடங்கள் நடந்தது என்கின்றனர்.
