வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர்: ஜனவரியில் மெட்ரோ ரெயில் சேவை!

Published On:

| By Balaji

சென்னை வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரெயில் பாதையில் இன்று டிராலியில் சென்று சோதனை நடத்த இருப்பதாகவும், ஜனவரி இறுதியில் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோமீட்டர் தூரத்துக்கு 3,770 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதை கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய ஆறு மெட்ரோ ரெயில் நிலையங்களும் வர உள்ளன.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜூன் மாதம் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து, “வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப் பாதையில் ரெயில் பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது. இன்று (டிசம்பர் 24) முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

ரெயில் ஓடும்போது தண்டவாளம் அருகில் உள்ள கட்டுமானங்களில் ரெயில் மோதாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று டிராலியில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். நாளை (டிசம்பர் 25) டீசல் என்ஜினை இயக்கி தண்டவாளத்தின் உறுதி தன்மை சோதனை செய்யப்பட உள்ளது.

26ஆம் தேதி மெட்ரோ ரெயிலை இந்தப் பாதையில் வேகமாக இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து 27ஆம் தேதி ரெயிலில் உள்ள கருவிகளை முறையாக தண்டவாளம் அருகில் உள்ள சிக்னல்களுக்கு ஏற்ப இயக்க முடிகிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பாதுகாப்பு ஆணையரின் சோதனை நடக்கும். ஜனவரி இறுதியில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share