தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகியவற்றில் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்திருந்தார். இதற்கான முழுச் செலவையும் தானே ஏற்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை வண்டலூர் பூங்காவிற்கு நாள் ஒன்றுக்கு 20,000 வீதம், இரண்டு நாட்களுக்கு மொத்தம் 40,000 நுழைவுச்சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டன.
இதனால், ஆன்லைன் நுழைவுச்சீட்டு இல்லாமல் இன்று நேரடியாக வண்டலூர் பூங்காவிற்கு வந்த ஏராளமான பொதுமக்களை, பூங்கா நிர்வாகத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள், பூங்கா ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் உடனடியாக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் அனுமதி சீட்டு இல்லாமல் பூங்காவிற்கு வரும் மக்கள் அனைவரும் இலவசமாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
