காங்கிரஸ், திமுக ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் இருக்கிறார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று (ஏப்ரல் 29) பாஜக சார்பில் வானதி சீனிவாசன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நீண்ட பதிலுரையை கொடுத்தார் முதலமைச்சர். ஆனால் ஒவ்வொரு நாளும் பட்டப்பகலில் நடந்து கொண்டிருக்கும் படுகொலைகள் சட்டம் – ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்விக் குறியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகளைப் பார்க்கும் போது தமிழகம் அமைதி பூங்கா என்ற நிலையில் இருந்து வெகு விரைவில் கீழே சென்றுவிடும் என்பது போல் இருக்கிறது. மாநில அரசாங்கம் அவர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் நடைபெறும் சோதனை குறித்து தான் கவலைப்படுகிறார்கள்.
முதல்வர் சட்டம் ஒழுங்கை உடனடியாக கவனிக்க வேண்டும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
குடிநீர் பிரச்சனையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுகின்ற போது 15 நாட்களுக்குள் பிரச்சனை சீரடையும் என்றார்கள். அதுவரையில் லாரிகள் மூலமாக தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கான நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை.
உக்கடம் மேம்பாலத்திற்காக அந்த பகுதியில் குடியிருந்தவர்களை வெளியேற்றி வேறு இடத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு புது குடியிருப்பு கட்டித் தர வேண்டும்” என்றார்
தொடர்ந்து பேசிய அவரிடம் கோவையில் கமல்ஹாசன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கட்சி ஆரம்பித்த நீங்கள் காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சியில் சேர்ந்து கொண்டு, திமுகவில் சேர்ந்து கொண்டு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் மக்கள் நீதி மய்யத்தின் கணக்கு என்னவென்று எனக்கு புரியவில்லை.
அவரை ஒரு கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. ஊழல் நிறைந்த காங்கிரஸ், திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் அவர்” என்று கமல்ஹாசனை விமர்சித்தார்.
தொடர்ந்து கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்துவதாக தகவல் இருக்கிறதே என்ற கேள்விக்கு, “எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை கட்சித் தலைமை தான் முடிவு செய்யும். எங்களை பொறுத்தவரை பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைப்பது. அனைத்து தொகுதிகளிலும் எங்களது கட்டமைப்பை வலுப்படுத்த வேலை செய்கிறோம்.
கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரைக்கும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு அங்கு பிரகாசமாக இருக்கிறது. கட்சியின் தலைவர்கள் கர்நாடகாவிற்கு நேரடியாக சென்றிருக்கிறார்கள். அதனால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுவதாக வரும் செய்திகள் உண்மையில்லை” என்று பேசினார்.
மோனிஷா