கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த கவுதமியின் கடிதத்தை பார்க்கும்போது மிகுந்த மனவேதனை ஏற்பட்டுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தனது மொத்த சொத்துகளையும் ஏமாற்றி அபகரித்த பாஜக பிரமுகருக்கு, கட்சியின் முக்கிய தலைவர் ஆதரவாக இருப்பதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி இன்று (அக்டோபர் 23) காலை அறிவித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் உள்ள தனது எம்.எல்.ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாஜகவில் இருந்து கவுதமி விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “கவுதமி மீது எனக்கு மிகுந்த அன்பு, மரியாதை உள்ளது. அவர்கள் எந்த அளவுக்கு கட்சியை நேசித்தார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் இப்போது கவுதமியின் கடிதத்தை பார்க்கும்போது மிகுந்த மனவேதனை இருக்கிறது.
தான் நடிகை என்பதற்கு முன்னுரிமை கொடுக்காமல், ஒரு அடிப்படை தொண்டர் போல தான் அவர் கட்சி பணியாற்றி வந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு கவுதமியிடம் ‘என்னோடு சேர்ந்து தேசிய அளவில் பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டிருந்தேன். ஆனால் அவர் மாநிலத்திற்காக பணியாற்றுவதாக கூறியிருந்தார்.
இப்போது நான் மாநில பணியில் அதிகளவில் ஈடுபட முடியவில்லை. அதனால் கவுதமியை அடிக்கடி சந்தித்து பேச முடியவில்லை. எனினும் கடந்த மாதம் கூட போனில் அழைத்து அவருடன் கேசுவலாக பேசியிருந்தேன்.
ஒரு வழக்கு தொடர்பாக கவுதமியின் உதவியாளர் எனக்கு கடந்த வாரம் மெசேஜ் செய்திருந்தார். அவரிடம் முழுமையான தகவல் தருமாறு கேட்டிருந்தேன்.
மாநில தலைவரிடமோ அல்லது என்னிடமோ இதுகுறித்து கவுதமி விரிவாக பேசியிருந்தால் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
அவர் புகார் தெரிவித்து காவல்துறை இன்று தான் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
கவுதமி பாஜகவில் இருந்ததால் புகாரை எடுக்கவில்லையா? இல்லை கட்சியை விட்டு வந்தால் தான் வழக்குப்பதிவு செய்வேன் என்று மாநில அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?” என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடிகை கவுதமியை ஏமாற்றிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!
பாஜகவில் இருந்து திடீர் விலகல்… நடிகை கவுதமி குமுறல்!