வள்ளலாரின் நூல்களை படித்தபோது 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் அவர் என்பதை தான் புரிந்துகொண்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா இன்று (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். அப்படி வள்ளலாரின் நூல்களை படித்தபோது பிரம்மிப்பில் ஆழ்ந்தேன்.
அப்போது, 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்பதை புரிந்துகொண்டேன்.
ஆனால் சிலர் சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சனாதன தர்மத்தின்படி இங்குள்ள அனைவரும் ஒருவரே. ஏற்றத்தாழ்வுகள் இல்லை. `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் வள்ளலாரின் கூற்று சனாதன தர்மத்தின் எதிரொலி.
நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆங்கிலேயர் சுரண்டியபோது தோன்றியவர் வள்ளலார். ஆங்கிலேயர்கள் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது ஆன்மீகத்தையும் சீர்குலைத்தார்கள்.
ஆயிரக்கணக்கான புதிய மதங்கள் வெளியே இருந்து வந்து நமது வழிபாட்டு முறையை அழித்தது.
பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் மொழிப்பெயர்க்கிறேன் என்று கூறி நமது நூல்களில் இருந்து ஆன்மீகத்தை அகற்றிவிட்டனர்.
1852-ல் நியூயார்க் டைம்ஸ் என்றழைக்கப்படும் பத்திரிகையில் இந்தியாவில் சமூக கட்டமைப்பை அழிக்க வேண்டும் கார்ல் மார்க்ஸ் என்பவர் எழுதினார்.
அந்த காலகட்டத்தில் தோன்றியவர் தான் வள்ளலார். அவர் ஆங்கிலேயரின் கட்டமைப்புக்கு மாறாக பாமர மக்களும் எளிதாக உணரும் வகையில் அன்பை எடுத்துரைத்தார்.
கொரோனா காலகட்ட்த்தில் மற்ற நாடுகள் கொரோனா தடுப்பு ஊசியை விற்க முயற்சித்தபோது, நாம் 169 நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை அனுப்பினோம்.
இந்தியா வல்லரசாகும்போதும், ஒட்டுமொத்த நாடுகளும் வள்ளலாரின் வழிவந்த இந்தியாவை ஏற்றுக்கொள்ளும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா