கலக்கியிருக்கிறாரா வடிவேலு?
வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்று பல தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சி உள்ளடக்கத்தின் பின்னே இருக்கின்றன. ’அவரோட காமெடிய பார்த்தா தான் மனசு ரிலாக்ஸ் ஆகி தூங்க முடியுது’ என்று சொல்கிற ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். கதையில் ஒரு பாத்திரமாக இடம்பெற்ற திரைப்படங்கள் முதல் அவருக்கென்று ‘தனி காமெடி ட்ராக்’ படங்கள் வரை அனைத்தும் இந்த மாயாஜாலத்தைச் செய்திருக்கின்றன. இடையில் சில காலம் நாயகனாக நடித்து ‘காமெடிக்கு லீவு’ விட்டவர், இப்போது மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி உடன் இணைந்து ’கேங்கர்ஸ்’ படத்தில் களமிறங்கியிருக்கிறார். vadivelu sundar c gangers movie review april 25
வின்னர், கிரி, லண்டன், ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் படங்களில் இந்த கூட்டணி நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறது.
‘கேங்கர்ஸ்’ படத்திலும் அது நிகழ்ந்திருக்கிறதா? vadivelu sundar c gangers movie review april 25

’காதுல பூ’ ரக கதை! vadivelu sundar c gangers movie review april 25
கோவை வட்டாரத்தில் ஒரு கிராமம். அங்கிருக்கிற அரசன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிற மாணவி ஒருவர் காணாமல் போகிறார். அவ்வட்டாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அங்குள்ள காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்கள் அப்புகார்களை விசாரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
காணாமல் போன மாணவியைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, காவல் துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுகிறார் ஆசிரியை சுஜிதா (கேத்தரீன் ட்ரெசா).
அதையடுத்து, ரகசியமாக ஒரு காவல் துறை அதிகாரியை அங்கு அனுப்பி வைக்கிறார் ஆணையர்.
சில நாட்கள் கழித்து, அந்த ஊருக்குப் புதிதாக வந்திறங்குகிறார் சரவணன் (சுந்தர்.சி). அரசன் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகச் சேர்கிறார்.
ஆனால் அங்கு ஏற்கனவே இன்னொரு பி.டி. மாஸ்டர் இருக்கிறார். அவரது பெயர் சிங்காரம் (வடிவேலு). சரவணனின் வருகையை அவர் விரும்புவதில்லை.
பள்ளியின் ஒரு பகுதியில் வாட்டர் கேன் வியாபாரம் முதல் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வரை பல செயல்பாடுகள் நடக்கின்றன. அதனைத் தோண்டித் துருவி விசாரிக்கிறார் சரவணன்.
அதனைக் காணும் சுஜிதா, மாணவி காணாமல் போன புகாரை விசாரிக்கவே சரவணன் வந்திருப்பதாக எண்ணுகிறார். அவரிடமும் நேரடியாகக் கேட்டுவிடுகிறார். அதற்கு சரவணன் எந்தப் பதிலும் சொல்வதில்லை.
இந்தச் சூழலில், பள்ளி தாளாளர் மலையரசனோடு (மைம் கோபி) சுஜிதா நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் உருவாகிறது. அப்போது சுஜிதாவை அவர் அவமானப்படுத்துகிறார்.
அதன் தொடர்ச்சியாக, மலையரசனையும் அவரது இளைய சகோதரரையும் தாக்குகிறார் சரவணன்.
மலையரசனின் மூத்த சகோதரர் முடியரசன் (ஹரீஷ் பேரடி) இறந்த காரணத்தாலேயே, அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் (மதுசூதன் ராவ்) அவர்களுக்குப் பெரிய பதவிகள் கிடைக்க உதவுகிறார். தன் வசமிருந்த சொத்துகள் சிலவற்றை அவர்களுக்குத் தந்திருக்கிறார். முடியரசன் அவருக்கு வலது கரமாக விளங்கியவர் என்பதே அதற்குக் காரணம்.
இந்த நிலையில், பள்ளியில் படித்துவரும் முடியரசனின் ஒரே மகனைத் தாக்குகிறார் சரவணன்.
அதையடுத்து, மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் மகனைக் காண நேரில் வருகிறார் முடியரசன். அவர் உயிருடன் இருப்பதே அப்போதுதான் தெரிய வருகிறது.
எதற்காக முடியரசன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்? அவர் மரணமடைந்துவிட்டதாக அமைச்சரிடம் ஏன் கதை கட்ட வேண்டும் என்பது உட்படப் பல கேள்விகளை எழுப்புகிறது முன்பாதி.
இந்தக் கதையில் சரவணன் வருகை ஏன் நிகழ்கிறது என்பது உட்படப் பலவற்றுக்கான பதில்களைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
அரசன் சகோதரர்கள் வசமிருக்கும் நூறு கோடி ரூபாய் பணத்தை ‘அபேஸ்’ செய்ய சரவணன் கூட்டணி முயல்வது அதிலொரு பகுதி.
மேற்சொன்னவற்றில் இருந்து, இது ஒரு வழக்கமான சுந்தர்.சி படத்திற்கான கதை என்றே தோன்றும்.
’லாஜிக் கிலோ என்ன விலை’ என்று கேட்கிற இயக்குனர் சுந்தர்.சியின் இதர படங்களைப் போன்றே ‘காதுல பூ’ ரகத்தில் இருக்கிறது ‘கேங்கர்ஸ்’ கதை மற்றும் காட்சியமைப்பு.
சரி, படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்கள், யதார்த்த நிலையோடு பொருந்தாத காட்சி சூழல்களை மறக்கடிக்கும் வகையில் காட்சியாக்கத்தில் ‘மேஜிக்’ செய்திருக்கிறாரா சுந்தர்.சி? இந்த கேள்விக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்ல வைக்கிறது இரண்டாம் பாதி.

சிரிப்பு கம்மி! vadivelu sundar c gangers movie review april 25
வேலவன் என்பவர் எழுதிய மூலக்கதையை அடிப்படையாகக் கொண்டு, வேங்கட் ராகவனுடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
’இரண்டாம் பாதிதான் ஹைலைட்’ என்று முடிவு செய்து அதில் கவனத்தைக் குவித்தவர்கள், முன்பாதியில் ‘வடிவேலுவுக்காகத் தானே ரசிகர்கள் தியேட்டருக்கு வருவாங்க’ என்று அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கின்றனர். ஆனால், அக்காட்சிகள் பெரியளவில் எடுபடவில்லை என்பதுதான் சோகம்.
’நகரம் மறுபக்கம்’ பாணியில் அமைந்த அக்காட்சிகளில் சிரிப்பு கம்மி.
இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு, குருராஜின் கலை வடிவமைப்பு மற்றும் சண்டைக்காட்சிகள், நடன வடிவமைப்பு உட்பட இப்படத்திலுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் ‘இது ஒரு வழக்கமான சுந்தர்.சி படம்’ என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தத் துணை நின்றிருக்கின்றன.
இசையமைப்பாளர் சத்யா இசையில் பாடல்கள் சட்டென்று மனதைக் கவ்வுகிற ரகத்தில் அமையவில்லை. பின்னணி இசையானது காட்சிகளோடு நாம் ஒன்றுவதில் தடையாக இல்லை. பின்பாதியில் திரையோடு நாம் ஒன்றிணைகிற அளவுக்கு இருக்கிறது அவரது பங்களிப்பு.
இரண்டாம் பாதியில் பல காட்சிகள் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த படங்களை நினைவூட்டுகின்றன. ஒருவேளை ‘அப்படங்களுக்கு அர்ப்பணம்’ செய்யும்விதமாக, அது போன்ற காட்சிகளை சுந்தர்.சி மீளாக்கம் செய்கிறாரோ என்று எண்ண வைக்கிறது ‘கேங்கர்ஸ்’.
வில்லன் கோஷ்டி இருக்குமிடத்தில் நாயகி கேத்தரீன் ட்ரெசா நடனமாடுகிற பாடல் காட்சி அத்தகைய உணர்வையே ஏற்படுத்துகிறது. அது கனவா, நனவா என்ற வடிவேலு பாத்திரத்தின் கேள்விக்குத் திரைக்கதையில் பதிலளிக்கப்படவில்லை.
வில்லன் வீட்டுக்குள் சுந்தர்.சியும் வடிவேலுவும் நுழைவதாக அமைந்த காட்சி உட்படப் பல இடங்களில் ‘பழைய வாடை’ அதிகம். ஆனால், ‘அதெல்லாம் பரவாயில்ல’ என்பதாகத் தொடர்ந்து நம்மைத் திரையை நோக்க வைப்பதில் இருக்கிறது சுந்தர்.சியின் திறமை.
நடிப்பைப் பொறுத்தவரை, வழக்கமான சுந்தர்.சி படங்களையே ‘கேங்கர்ஸ்’ பிரதிபலிக்கிறது.
‘இவ்வளவு போதும்’ என்பது போன்றே நடிப்புக்கலைஞர்களின் செயல்பாடு இருக்கிறது.
பெண் கெட்டப்பில் வரும் காட்சியில் வடிவேலு, நமக்கு ‘பாட்டாளி’யை நினைவுபடுத்துகிறார். ‘அவர் கலக்கியிருக்கிறாரா’ என்ற கேள்விக்கு ஒவ்வொரு ரசிகர்களும் ஒவ்வொரு விதமான பதிலை ‘கேங்கர்ஸ்’ஸில் பெறலாம். ஆனால், நம் பார்வையில் எதிர்பார்ப்புக்குரிய பலனைத் திரையில் அவர் தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
முனீஸ்காந்த், பக்ஸ் ஆகியோருக்கு இரண்டாம் பாதியில் கொஞ்சமாய் இடம் தரப்பட்டிருக்கிறது.

வில்லன்களாக வரும் ஹரீஷ் பேரடி, மைம் கோபி, அருள்தாஸுக்கு நாயகன் சுந்தர்.சியிடம் அடிவாங்கவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால், அவர்களது வில்லத்தனத்தைக் காட்ட வழி அமையவில்லை.
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் குழந்தை நட்சத்திரமாக மிளிர்ந்த மாஸ்டர் பிரபாகர், ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். அவரது பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.
இப்படிப் பலர் இதில் நடித்திருப்பதால் நாயகன் சுந்தர்.சி மற்றும் நாயகி கேத்தரீன் ட்ரெசாவின் பளு வெகுவாகக் குறைந்திருக்கிறது.
நாயகனாக இப்படித்தான் திரையில் தெரிய வேண்டும் என்று திட்டமிட்டுக் காட்சிகளை அமைப்பவர் சுந்தர்.சி. இப்படத்திலும் அவருக்கேற்ற பாத்திரத்தை வடித்து, திரையிலும் அப்படியே வந்து போயிருக்கிறார்.
தான் நடித்த படங்களில் சேலை கட்டிய வெளிநாட்டுப் பெண் என்ற தோற்றத்தைத் தருபவர் கேத்தரீன் ட்ரெசா. இதிலும் அப்படியே வந்து போயிருக்கிறார்.
இது போக வாணி போஜன், மதுசூதன்ராவ், கௌரவ தோற்றத்தில் இரண்டு ஷாட்களில் விமல் ஆகியோர் இப்படத்தில் தோன்றியிருக்கின்றனர்.
‘முன்பாதி ரொம்பச் சுமார், பின்பாதி ஓரளவுக்கு ஓகே’ என்றிருக்கிறது ‘கேங்கர்ஸ்’.
‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுக்கு இணையாக ரமேஷ் கன்னா, சார்லி உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கும். அது போன்றதொரு ‘ஸ்பேஸ்’ இப்படத்தில் பக்ஸ், முனீஸ்காந்துக்கு தந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிரித்திருக்கலாம்.
சில காட்சிகளில் நிறைந்திருக்கும் வன்முறை சித்தரிப்பு, படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தி இருக்கலாம்.
இப்படிச் சில குறைகள் இருந்தாலும், இறுதியாக வரும் முக்கால் மணி நேரம் ஓரளவுக்குச் சிரிக்க வைக்கிறது. அந்த ஒரு விஷயத்தால் நல்ல பெயரைப் பெற்றுவிடுகிறது ‘கேங்கர்ஸ்’. vadivelu sundar c gangers movie review april 25
– உதயசங்கரன் பாடகலிங்கம்