உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு பணிகள் தொய்வு!

Published On:

| By Selvam

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு பணியில் இன்று (நவம்பர் 25) தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி சில்க்யாரா சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், சுரங்க வல்லுநர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரில்லிங் இயந்திரங்கள் மூலம் துளையிட்டு பைப்கள் வழியாக தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு பொருட்கள் அனுப்பப்பட்டது. எண்டோஸ்கோபிக் கேமரா மூலம் தொழிலாளர்களின் வீடியோ காட்சிகள் வெளியானது.

தொழிலாளர்களை மீட்க சுரங்கப்பாதையில் ஆகர் என்ற அமெரிக்க இயந்திரம் மூலம் துளையிடும் பணியானது கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.

சுரங்க இடிபாடுகளில் அதிகளவில் இரும்புகள் இருந்ததால் ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்னும் 5 மீட்டர் தூரம் வரை மட்டுமே துளையிட வேண்டும் என்பதால் மீட்பு படையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி சவாலானது என்பது அனைவரும் அறிந்ததே.

மிக அருகில் சென்றவுடன் ஆகர் இயந்திரத்தின் செயல்பாடுகள் முடங்கியது. நாளை காலை ஆகர் இயந்திரம் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தொழிலாளர்களை மீட்பதற்காக அனைத்து விதமான பிளான்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சுரங்க வல்லுநர் அர்னால்டு டிக்ஸ் கூறும்போது, “துளையிடுதல் பணியின் போது ஆகர் இயந்திரம் உடைந்துவிட்டது. இதனால் ஆகர் இயந்திரத்தை கொண்டு தொழிலாளர்களை மீட்பது கடினம். தொழிலாளர்களை மீட்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. மாற்று வழியையும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜஸ்தான் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share