உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்த நிலையில் வெறும் ரூ5,000-க்கான காசோலைகளை அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு வழங்கி இருப்பது பொதுமக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கீர் கங்கா நதியில் பெருவெள்ளம் பாய்ந்தோடியது. இந்த பெருவெள்ளத்தில் தாராசில் உள்ளிட்ட பகுதிகள் மிக மோசமான பேரழிவை சந்தித்தன.
உத்தரகாண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்; 49 பேர் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. 1,000-க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உத்தரகாண்ட் பெருவெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தன.
இதனையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது வெறும் ரூ.5,000-க்கான காசோலைகள்தான். இதனால் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உத்தரகாண்ட் மாநில அரசு, தற்போது வழங்கப்பட்டிருப்பது இடைக்கால நிவாரணம்தான்.. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னரே முழுமையான நிதி உதவி வழங்கப்படும் என்கிறது. ஆனாலும் அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் பொதுமக்கள் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தினர்.
