பல்வேறு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தி வரும் தனக்கு நோபல் அமைதி பரிசு வழங்கமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதங்கம் தெரிவித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. us president Trump brags for Nobel peace Prize
இந்தியா தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் போகும் இடமெல்லாம் ’நான் தான் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.
மேலும், ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், காங்கோ மற்றும் ருவாண்டா நாடுகளுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக நேற்று அறிவித்தார்.
இரு நாடுகளின் அதிகாரிகள் வரும் 23ஆம் தேதி வாஷிங்டனில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும், இது ஆப்பிரிக்கா மட்டுமின்றி உண்மையில் உலகுக்கே ஒரு சிறந்த நாள் என்றும் ட்ரம்ப் கூறினார்.
மேலும் அவர் தான் முன்பு செய்த அமைதி முயற்சிகளை நோபல் குழு மதிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும் மோரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறியதாவது “நிச்சயமாக எனக்கு நோபல் பரிசு தந்திருக்க வேண்டும், குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதற்காக மட்டும் கிடையாது, செர்பியா – கொசோவோ இடையிலான மோதல், எகிப்து – எத்தியோப்பியா இடையிலான மோதல் என இப்படி நான் எண்ணற்ற முறை அமைதியை நிலைநாட்டியுள்ளேன். இருந்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. ஏனென்றால் அவர்கள் லிபரல்களுக்கு மட்டுமே தருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் அரசு தனது எக்ஸ் பக்கத்தில், “2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்பை பாகிஸ்தான் அரசு பரிந்துரைத்துள்ளது. சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியின் போது அவரது தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்பை முறையாகப் பரிந்துரைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது” என அதில் குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனில் மூன்று நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் காங்கோ மற்றும் ருவாண்டா இடையிலான அமைதி ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இது கிழக்கு காங்கோவில் பல ஆண்டுகளாக நடைபெற்ற போருக்கு முடிவுகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
தன்னை உலக அமைதிவாதியாகக் காட்சி அளிக்கும் ட்ரம்ப், சர்வதேச மோதல்களை முடிவுக்கு கொண்டு வர தனது பேச்சுவார்த்தை திறனை பலமுறைகளாக விளம்பரப்படுத்தியுள்ளார்.
எனினும், தற்போது தொடர்ந்து வரும் ரஷ்யா – உக்ரைன் மற்றும் ஈரான் – இஸ்ரேல் போர்கள் அவரது பதவிக்காலத்தை அமைதிக்காலமாகக் காட்ட முடியாத நிலையை உருவாக்கியுள்ளன.
