2024 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர். UPSC exam results
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு 2024 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு நடத்தியது.
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் இறுதி முடிவை யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
மொத்தம் 1009 பேர் தேர்வாகினர். இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
தர்மபுரியைச் சேர்ந்த கிங்மேக்கர் பயிற்சி நிறுவனத்தில் படித்த சிவச்சந்திரன் தமிழக அளவில் முதலிடம் பெற்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களான பவித்ரா, இஷானி ஆனந்த், சரண்யா, அப்சரா, தணிகை அரசன், சஞ்சய் சீனிவாசன், சாய் கிரண், ஹரி பரசாத், ஆர்கே கோகுல், கௌசிகா, சிவனேந்திரன், முத்தரசி, வித்யாதர், முருகேசன், கவின்மொழி, காமராஜ், பேச்சி, அருண் பிரகாஷ், ரூபன் சியானா, டல்வின் லால், கரண் ஐயப்பா, மது சூரியா, மோகனப்பூரணி, சரவணகுமார், கிருத்திகா, பிரவீன் குமார், கோகுல கண்ணன், ஹரி கிருஷ்ணன், ரியாஸ் வாட்சன், விஷாலி, சங்கர் பாண்டியராஜ், தமிழரசி, கிரண், சௌந்தர்யா, லாவண்யா உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.
இதில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையிலிருந்து 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக அவர் நேற்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாதிரி நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி மனிதநேய ஐஏஎஸ் கட்டணமில்லா பயிற்சி மையத்தில் இலவசமாக நடத்தப்பட்டது.
தேர்வர்களுக்கு தனித்தனியாக மாதிரி நேர்காணல் தேர்வுகள், அரசு உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட்டன.
மேலும் நேர்முகத் தேர்வில் பங்கு பெறுபவர்கள் டெல்லி சென்று வருவதற்கு விமான டிக்கெட் டெல்லியில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
அவ்வாறு மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். UPSC exam results