பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ‘ராயல்’ சல்யூட்: ராணுவத்தில் அதிகாரி ஆகலாம்… 394 காலியிடங்கள்! யுபிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

UPSC exam for 394 vacancies in NDA

“படித்து முடித்துவிட்டு வேலை தேடுவதை விட, படிக்கும்போதே ஒரு கெத்தான வேலைக்குத் தயாரானால் எப்படி இருக்கும்?” அதுவும் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் ராணுவத்தில், உயரிய அதிகாரி (Officer Cadre) அந்தஸ்து என்றால் சொல்லவா வேண்டும்!

பிளஸ் 2 முடித்த, மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்காகக் காத்திருக்கிறது அந்தப் பொன்னான வாய்ப்பு. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), தேசியப் பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமி (NA) தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

காலியிடங்கள் எவ்வளவு?

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளிலும் சேர்த்து மொத்தம் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

தேசியப் பாதுகாப்பு அகாடமி (NDA):

  • ராணுவம் (Army): 208 இடங்கள் (பெண்களுக்கு 10 இடங்கள்).
  • கடற்படை (Navy): 42 இடங்கள் (பெண்களுக்கு 3 இடங்கள்).
  • விமானப்படை (Air Force): பறக்கும் பிரிவு மற்றும் தரைத்தளப் பணிகளில் மொத்தம் 120 இடங்கள் (பெண்களுக்கு 6 இடங்கள்).
  • கடற்படை அகாடமி (NA): 10+2 கேடட் என்ட்ரி திட்டத்தின் கீழ் 24 இடங்கள் (ஆண்களுக்கு மட்டும்).

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ADVERTISEMENT

இந்தத் தேர்வின் ஸ்பெஷாலிட்டியே அதன் கல்வித் தகுதிதான்.

  • ராணுவப் பிரிவு: பிளஸ் 2 வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். (கலை, அறிவியல், வணிகவியல் என எதுவாக இருந்தாலும் ஓகே).
  • விமானப்படை மற்றும் கடற்படை: பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல் (Physics) மற்றும் கணிதம் (Maths) பாடங்களை எடுத்துப் படித்திருப்பது கட்டாயம்.
  • முக்கிய குறிப்பு: தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களும் (Appearing Candidates) தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் திருமணமாகாத ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ இருக்க வேண்டும். ஜூலை 2, 2006 முதல் ஜூலை 1, 2009 இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு: 900 மதிப்பெண்களுக்கு நடைபெறும் (கணிதம் மற்றும் பொது அறிவு).
  • SSB நேர்காணல்: எழுத்துத் தேர்வில் பாஸ் செய்பவர்களுக்கு, 5 நாட்கள் நடைபெறும் இந்தச் சிறப்பு நேர்காணல் (Intelligence & Personality Test) இருக்கும். இதுவும் 900 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ள துடிப்புள்ள இளைஞர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2024 (மாலை 6 மணிக்குள்).
  • தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 13, 2025.

கல்லூரிக்குச் சென்று 4 வருடம் படித்துவிட்டு வேலை தேடுவதை விட, என்டிஏ (NDA) மூலம் பட்டப்படிப்புடன் கூடிய ராணுவப் பயிற்சியையும் முடித்துவிட்டு, 22 வயதில் ‘லெப்டினன்ட்’ (Lieutenant) ஆகப் பதவியேற்பது ஒரு தனி கௌரவம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share