மாற்றுத்திறனாளிகளுக்கு ‘நோ’ அலைச்சல்… கேட்ட ஊரிலேயே தேர்வு மையம்: யுபிஎஸ்சி கொடுத்த ‘சூப்பர்’ வாக்குறுதி!

Published On:

| By Santhosh Raj Saravanan

UPSC exam centres at desired location for differently abled candidates

“ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. படிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், தேர்வு எழுத மட்டும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி, வெளியூர்களுக்குச் சென்று வருவதுதான் பெரும் சவாலாக இருக்கிறது” என்று வேதனைப்படும் மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி உச்சநீதிமன்றத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் இடத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வோம் என்று யுபிஎஸ்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

என்ன நடந்தது நீதிமன்றத்தில்?

சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகள் சிலர், “எங்களுக்குத் தேர்வு மையங்கள் வெகு தொலைவில் ஒதுக்கப்படுவதால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் அவதிக்குள்ளாகிறோம். எனவே, நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அல்லது நாங்கள் விரும்பும் நகரத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

யுபிஎஸ்சி சொன்ன ‘குட் நியூஸ்’:

ADVERTISEMENT

விசாரணையின் போது யுபிஎஸ்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆணையத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

“மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை ஆணையம் முழுமையாக உணர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில், அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடும் விருப்பமான நகரத்திலேயே (Desired Location) தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். ஒருவேளை அவர்கள் தாமதமாக விண்ணப்பித்திருந்தாலும், மற்றவர்களுக்குப் பொருந்தும் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ (First Apply First Allot) என்ற விதி இவர்களுக்குப் பொருந்தாது. இவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாக, அவர்கள் கேட்ட இடத்திலேயே மையம் ஒதுக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நீதிபதிகள் பாராட்டு:

யுபிஎஸ்சியின் இந்த மனிதாபிமான முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கைத் முடித்து வைத்தனர். “தேர்வு எழுதும் ஆர்வத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயணச் சுமையைக் குறைப்பது மிக முக்கியம்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஏன் இது முக்கியம்?

பொதுவாக யுபிஎஸ்சி தேர்வுகளுக்குக் கடைசி நேரத்தில் விண்ணப்பித்தால், நாம் கேட்கும் ஊரில் இடம் காலி இருக்காது. இதனால், வேறு மாநிலத்திலோ அல்லது தொலைதூர மாவட்டத்திலோதான் மையம் கிடைக்கும். இது சாதாரண தேர்வர்களுக்கே அலைச்சலைக் கொடுக்கும். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அல்லது பார்வைக் குறைபாடுடைய தேர்வர்களுக்கு இது நரக வேதனை. தற்போது யுபிஎஸ்சி அளித்துள்ள இந்த வாக்குறுதி, அவர்களின் அரசுப் பணி கனவுக்குப் போடப்பட்டிருந்த ஒரு பெரிய தடைக்கல்லை அகற்றியுள்ளது. திறமை இருந்தும், போக்குவரத்துச் சிரமங்களால் தேர்வை எழுத முடியாமல் போன எத்தனையோ மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share