கருத்து வேறுபாடு காரணமாக அவரது வருங்கால மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது சடலத்துடன் இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த பலரையும் கண்கலங்கச் செய்தது. up man knot to died lover
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சியை சேர்ந்தவர் பிரியங்கா மாதேசியா (23). இவரது வீட்டின் மாடியில் இருந்த வீட்டிற்கு சன்னி (29) என்ற இளைஞர் வாடகைக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் மூன்று வருடங்களாக தொடர்ந்தது. மேலும் தனது வீட்டின் அருகிலேயே மொபலை பழுது பார்க்கும் கடையையும் நடத்தி வந்தார்.
பிரியங்கா – சன்னியின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அவர்களின் திருமணம் இந்தாண்டு நவம்பர் 29ஆம் தேதி நடக்கும் என திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா அன்றிரவு தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலையில் இதனைக் கண்ட குடும்பத்தினர் பிரியங்காவின் உடலை இறக்கி அருகிலிருந்த அரசு சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
எனினும் இதுதொடர்பாக பிரியங்காவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் எந்த புகாரும் தெரிவிக்காத நிலையில், நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.
அதில் குற்ற உணர்ச்சியுடனும், வருங்கால மனைவியை பிரிந்த துக்கத்திலும் அழுதபடியே கலந்துகொண்ட சன்னி, அனைவர் முன்னிலையிலும் பூசாரி மந்திரம் ஓத, பிரியங்காவின் நெற்றியில் குங்குமமிட்டு, சவப்பெட்டியை சுற்றி வந்து திருமணச் சடங்குகளை நிறைவேற்றினார். தொடர்ந்து அவரே வருங்கால கணவர் என்ற முறையில் பிரியங்காவின் உடலுக்கு நெருப்பூட்டி தகனம் செய்தார்.
அன்பின் உணர்ச்சிகரமான வெளிப்பாடாக நடந்த இந்த நிகழ்வைக் கண்டு அங்கிருந்த பலரும் கண்கலங்கினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சன்னி கூறுகையில், “நான் அவளை மிகவும் நேசித்தேன். எங்கள் திருமணத்தை நவம்பர் மாதத்தில் திட்டமிட்டிருந்தோம். இப்போது அவள் இறந்த போதிலும், இது அவளுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழி என நினைக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.